முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு; மின் உற்பத்தியும் குறைந்தது
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு; மின் உற்பத்தியும் குறைந்தது
ADDED : மார் 11, 2024 04:03 AM
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 121 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2826 மில்லியன் கன அடியாகும்.
நேற்று முன்தினம் தமிழகப் பகுதிக்கு 105 கன அடியாக இருந்த நீர் திறப்பு திடீரென 1227 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் அறுவடை மும்முரமாகி உள்ள நிலையில் விவசாயத்துக்கு தண்ணீர் தேவை குறைவாக இருந்த போதிலும் நீர் திறப்பை திடீரென அதிகரித்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று காலை 6:00 மணியில் இருந்து நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் திறப்பு சற்று குறைக்கப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 112 மெகாவட்டாக இந்த மின் உற்பத்தி 90 மெகாவாட்டாக குறைந்தது.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே மதுரை குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அடிக்கடி நீர் திறப்பை நீர்வளத் துறை அதிகாரிகள் திடீரென குறைப்பதும், கூட்டுவதுமாக உள்ளனர்.
இதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

