வில்லங்க சான்றில் விபரங்கள் 'மிஸ்சிங்': சரி செய்ய பதிவுத்துறை நடவடிக்கை
வில்லங்க சான்றில் விபரங்கள் 'மிஸ்சிங்': சரி செய்ய பதிவுத்துறை நடவடிக்கை
ADDED : ஜூலை 21, 2025 01:07 AM

சென்னை: சொத்து விற்பனை தொடர்பான வில்லங்க சான்றிதழில், சம்பந்தப்பட்ட மண்டலம், பதிவு மாவட்ட விபரங்களை சேர்க்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் நிலம், வீடு வாங்குவோர், அதற்கான பத்திரங்களை சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்கின்றனர். சொத்து வாங்குவோர், முந்தைய பத்திரப்பதிவு விபரங்களை சரி பார்க்க, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வில்லங்க சான்று பெறுகின்றனர்.
அதாவது, கட்டணம் செலுத்தி, 'ஆன்லைன்' வாயி லாக வில்லங்க சான்றிதழ் பிரதி பெறப்படுகிறது.
இலவசம்
அத்துடன், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வில்லங்க சான்று விபரங்களை, பதிவுத்துறை இணையதளத்தில் இலவசமாக பார்க்கும் வசதியும் நடைமுறையில் உள்ளது. இந்த இரண்டு வசதிகளையும், சொத்து வாங்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வசதிகள் வாயிலாக வழங்கப்படும் வில்லங்க சான்றிதழ்களில், சார் - பதிவாளர் அலுவலகத்தின் பெயர், சொத்தின் சர்வே எண், பதிவான பத்திரத்தின் எண், ஆண்டு, மதிப்பு, கொடுத்தவர், வாங்கியவர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறுகின்றன.
ஆனால், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகம், பதிவுத்துறையின் எந்த மண்டலத்தில், எந்த பதிவு மாவட்டத்துக்குள் வருகிறது என்ற விபரம் இடம் பெறுவதில்லை.
வெளியூர்களில் இருந்து வந்து சொத்து வாங்கும் நிலையில், இந்த விபரங்கள் இல்லாதது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வில்லங்க சான்றிதழில், மண்டலம், மாவட்டம் போன்ற விபரங்களை சேர்த்தால், அது மக்களுக்கு முழுமையான பயனை அளிக்கும். அதற்கு பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதை நிறைவேற்ற, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
வசதி இல்லை
இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வில்லங்க சான்றிதழ் தேடும் போது, மண்டலம், பதிவு மாவட்டம், சார் - பதிவாளர் அலுவலகம், கிராமம் என்ற அடிப்படை தகவல்கள் பெறப்படுகின்றன. ஆனால், வில்லங்க சான்றிதழில், சார் - பதிவாளர் அலுவலக பெயர் மட்டும் இருந்தால் போதும் என்ற அடிப்படையில் தற்போதைய நடைமுறை அமைந்துள்ளது.
வில்லங்க சான்றிதழ் தொகுத்து வழங்கும் சாப்ட்வேரில், இதற்கான வசதி செய்யப்படவில்லை. தற்போது மக்களிடம் எழுந்துள்ள கோரிக்கையை கருத் தில் வைத்து, புதிதாக உருவாக்கப்படும், 'ஸ்டார் 3.0' மென்பொருளில், உரிய வசதிகள் ஏற்படுத்த, பணிகள் நடந்து வருகின்றன.
இந்த விஷயத்தில் மக்களின் எதிர் பார்ப்பு பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.