யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
ADDED : ஆக 05, 2024 05:42 PM

சென்னை: யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை. குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துகின்றன. இதனால், போலீசாரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது. அந்த சேனல் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.