ADDED : நவ 21, 2024 01:14 AM
சென்னை:'தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் மிருகத்தனமானது' எனக் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆசிரியை குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்துவந்த ரமணி, பள்ளி வளாகத்தில் மதன்குமார் என்பரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். பலத்தக் காயமடைந்து, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி கேட்டு, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அமைச்சர்களை, உயிரிழந்த ஆசிரியை குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பி வைத்தேன். பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம், மிகவும் மிருகத்தனமானது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி, போலீசாரால் கைது செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி, தண்டனை பெற்று தரப்படும். ஆசிரியை ரமணியின் உயிரிழப்பு பள்ளி கல்வி துறைக்கும், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுவோருக்கு, ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

