பகவதி அம்மன் கோவிலுக்கு வாடகை பாக்கி: ஐகோர்ட் கேள்வி
பகவதி அம்மன் கோவிலுக்கு வாடகை பாக்கி: ஐகோர்ட் கேள்வி
ADDED : பிப் 03, 2024 12:22 AM
மதுரை:கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு பூம்புகார் நிறுவனம் அளிக்க வேண்டிய, 2.32 கோடி ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்காத அறநிலைய துறை கமிஷனர் மீதான அவமதிப்பு வழக்கில், தற்போதைய நிலை குறித்து, தகவல் தெரிவிக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பூம்புகார் நிறுவனம்
திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக 12,431 சதுர அடி காலி மனை பூம்புகார் கப்பல் கழகத்திற்கு, 1984ல் வாடகைக்கு வழங்கப்பட்டது. கடந்த 2018 வரை 2.32 கோடி ரூபாய் வரை வாடகை செலுத்தாமல், அந்த நிறுவனம் பாக்கி வைத்துள்ளது. எனவே, நிலுவை வாடகையை உரிய வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அறநிலையத்துறை கமிஷனர், கன்னியாகுமரி கலெக்டர் ஆகியோர் பூம்புகார் கப்பல் கழக வாடகை பாக்கியை அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரிடம் வசூலிக்க, 2022ல் உத்தரவிட்டது.
இதுவரை வாடகை வசூலிக்கப்படவில்லை.எனவே, நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ராதாகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
நடவடிக்கை இல்லை
இவ்வழக்கு, நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, 'கோவிலுக்கு வரவேண்டிய வருவாய் 2 கோடி ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, 'வாடகை பாக்கி வசூலில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து, தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

