சென்னை - தி.மலைக்கு நேரடி ரயில் பாதை அமைக்க கோரிக்கை
சென்னை - தி.மலைக்கு நேரடி ரயில் பாதை அமைக்க கோரிக்கை
ADDED : செப் 22, 2024 01:23 AM

சென்னை:ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, டில்லியில் நேற்று முன்தினம் சந்தித்த தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன், 'சென்னை - திண்டிவனம் - திருவண்ணாமலைக்கு, நேரடி ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்' என வலியுறுத்தி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் பழமையானதால், 535 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு புதிய பாலத்தை கட்டியுள்ளது. இந்த பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், பழைய பாலத்தில், தண்டவாளத்தில் செல்லும் சிறிய வகை வண்டிகளில் சென்று, கடலின் அழகையும், கப்பல்களையும் சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சென்னை - திருவண்ணா மலைக்கு நேரடி ரயில் பாதை இல்லை. தற்போது, காட்பாடி, வேலுார் வழியாக இருக்கும் பாதையில், திருவண்ணாமலைக்கு ரயிலில் செல்ல ஆறு மணி நேரமாகிறது.
சென்னை ---- திருவண்ணா மலைக்கு, திண்டிவனம் வழியாக நேரடி ரயில் பாதை அமைத்தால், பயண நேரம் மூன்று மணி நேரமாக குறையும். விருத்தாசலத்தில் இருந்து கும்பகோணத்துக்கு ரயில் பாதை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். அவற்றை செய்து தருவதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அஸ்வத்தாமன் கூறினார்.