ADDED : மார் 21, 2025 12:48 AM
தமிழகத்தில் 1,300 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உடனடியாக நிரப்ப வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையருக்கு, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியதாவது:
பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வதிலும், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும், ஊராட்சி ஆவணங்களை பராமரிப்பதிலும், ஊராட்சி நிர்வாகங்களை நடத்துவதிலும், அரசின் வரி வருவாய் வசூலிப்பதிலும், ஊராட்சி செயலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில், 1,300க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. ஒரே நபர் பல ஊராட்சிகளை சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது.
இதனால், ஊராட்சி செயலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஊராட்சி செயலர் பணி நியமனம் ஊராட்சி தலைவரிடம் இருந்தது.
பல போராட்டங்களுக்கு பின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்வு செய்ய, கலெக்டர் தலைமையிலான குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, காலதாமதம் இல்லாமல் காலி பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-- நமது நிருபர் -