ADDED : நவ 29, 2024 01:29 AM
தமிழகத்தில், 5 கோடி ரூபாய் செலவில், சிவகங்கை மாவட்டம் கீழடி; விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை; திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி; தென்காசி மாவட்டம் திருமலாபுரம்; திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம்; கடலுார் மாவட்டம் மருங்கூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார் ஆகிய, எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் நடக்கின்றன.
பொதுவாக, ஜனவரி முதல் செப்., வரை, தமிழகத்தில் அகழாய்வு செய்வதற்கான அனுமதியை, மத்திய அரசு வழங்கும். இந்த ஆண்டு, லோக்சபா தேர்தல், மத்திய தொல்லியல் துறை இயக்குநர் நியமிக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால், மே மாதத்தில் தான் அனுமதி கிடைத்தது.
அதன்பின், ஜூனில் அகழாய்வுப் பணிகள் துவங்கிய நிலையில், கடந்த இரண்டு மாதமாக, வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்கிறது. இதனால், அகழாய்வுப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அகழாய்வுக்காக தோண்டிய குழிகளை, தார்ப்பாயினால் மூடி உள்ளனர்.
மண் சகதியாக உள்ளதாலும், ஊற்றெடுப்பதாலும், புதிய குழிகள் தோண்ட முடியவில்லை. இதேநிலை இந்த ஆண்டு முழுதும் நீடிக்கும் என்பதால், பொங்கலுக்கு பிறகு, அகழாய்வுப் பணிகளை முழுமூச்சாக தொடர, தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.