ADDED : ஜூலை 17, 2025 11:25 PM
சென்னை:திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன. அவற்றில் வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை எலக்ட்ரானிக் குலுக்கலுக்கான முன்பதிவு நாளை காலை 10:00 மணிக்கு துவங்கி, 21ம் தேதி காலை 10:00 மணியுடன் முடிவடைகிறது.
கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கும், அக்டோபர் 30ல் நடைபெற உள்ள புஷ்பயாகத்திற்கும், 22ம் தேதி காலை 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.
ஆன்லைன் வாயிலாக தரிசிக்கும் கல்யாண உத்சவம், ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு, 22ம் தேதி மாலை 3:00 மணிக்கும், அங்கப்பிரதட்சணத்திற்கான முன்பதிவு, 23ம் தேதி காலை 10:00 மணிக்கும்; மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு, அன்று மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது.
அக்டோபர் மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு, 24ம் தேதி காலை 10:00 மணிக்கும், அன்று மாலை 3:00 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் துவங்குகிறது.

