sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ம.க., நிறுவனர், தலைவராக ராமதாஸ் தொடர்வார்; பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

/

பா.ம.க., நிறுவனர், தலைவராக ராமதாஸ் தொடர்வார்; பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

பா.ம.க., நிறுவனர், தலைவராக ராமதாஸ் தொடர்வார்; பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

பா.ம.க., நிறுவனர், தலைவராக ராமதாஸ் தொடர்வார்; பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்


UPDATED : ஆக 18, 2025 08:56 AM

ADDED : ஆக 18, 2025 01:41 AM

Google News

UPDATED : ஆக 18, 2025 08:56 AM ADDED : ஆக 18, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பட்டானுாரில் நேற்று நடந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தரப்பு பொதுக்குழு கூட்டத்தில், அவரே கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் தொடர்வார் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதலாக உருவெடுத்தது. கடந்த ஏப்ரலில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். அதை ஏற்க மறுத்த அன்புமணி, கட்சியினர் தன்னை தேர்ந்தெடுத்ததாகவும், அதை தேர்தல் கமிஷன் அங்கீகரித்து உள்ளதாகவும் கூறி, தானே பா.ம.க., தலைவராக தொடர்வதாக அறிவித்தார்.

பேச்சு தோல்வி

அதை தொடர்ந்து, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், பதிலுக்கு தந்தை ஆதரவாளர்களை நீக்குவதாக அன்புமணி அறிவிப்பதும் தொடர்ந்தது. இருவரையும் சமாதானப்படுத்த நடந்த பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.

கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர, ஆகஸ்ட் 17ல் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னதாக, ஆக., 9ல் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி அறிவித்தார்.

அதன்படி, கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில், அன்புமணி தலைமையில் பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ராமதாசுக்கு தனி நாற்காலி ஒதுக்கப்பட்டு, அதில் துணி போடப்பட்டு இருந்தது; ஆனால், ராமதாஸ் பங்கேற்கவில்லை. 'பா.ம.க., தலைவராக அடுத்த ஓராண்டுக்கு அன்புமணி தொடர்வார்' என, அந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, 'அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதமானது. அன்புமணி தன்னைத் தானே தலைவராக அறிவித்துக் கொண்டது கட்சி விதிகளின்படி செல்லாது' என, தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதினார்.

ஒப்புதல் பெற முயற்சி

இந்நிலையில், ராமதாஸ் தரப்பு பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம் பட்டானுாரில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ராமதாஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக, கடந்த மே 30ம் தேதியில் இருந்து செயல்படுகிறார்; அதை, பொதுக்குழு அங்கீகரிக்கிறது. இப்பொறுப்பில் அவர் தொடர்ந்து செயல்படுவார் என்பது உட்பட, 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு ஒப்புதலுடன், பா.ம.க., அமைப்பு விதி, 35 புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விதி, பா.ம.க.,வின் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரத்தை ராமதாசுக்கு மட்டுமே வழங்கி உள்ளது. அத்துடன், பா.ம.க., சார்பில் தேர்தலில் போட்டியிடுவோருக்கு, கட்சி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அன்புமணி கூட்டிய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்பதை, தான் கூட்டிய பொதுக்குழு வாயிலாக ராமதாஸ் வெளிப்படுத்தி உள்ளார். இரு தரப்பினரும் பொதுக்குழு கூட்டிய நிலையில், தந்தை - மகன் மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

இருவர் கூட்டிய பொதுக்குழுவில் தேர்தல் கமிஷன் எதை அங்கீகரிக்கிறதோ, அவர்கள் கையில் கட்சி செல்லும். எனவே, இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெற முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

'நல்ல கூட்டணி அமைப்பேன்'

விழுப்புரம் மாவட்டம் பட்டானுார் அருகே உள்ள சங்கமித்ரா திருமண நிலையத்தில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் பேசியதாவது: கூட்டத்தில், 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, தமிழகத்தில் இருக்கிற எட்டு கோடி மக்களுக்கானவை. பா.ம.க., அனைத்து மக்களுக்காக பாடுபடும் கட்சி. நான் ஒரு ஜாதி மக்களுக்காக பாடுபடவில்லை.
தமிழகத்தில் உள்ள 324 சமுதாயங்களுக்காக பாடுபட்டு வருகிறேன்; தமிழக மக்களுக்கான எல்லா பிரச்னைகளுக்காகவும் போராடி வருகிறேன். நீங்கள் எதிர்பார்ப்பது, 10.5 சதவீத இட ஒதுக்கீடு போராட்டம். அ.தி.மு.க., ஆட்சியின் போது, 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தனர். அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது, அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதற்காகத்தான். கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை எனக்கு கொடுத்திருக்கிறது, கட்சியின் சிறப்பு பொதுக்குழு. கட்சியினர் அனைவர் மனதிலும் இருப்பதை அறிவேன். பா.ம.க.,வினர் மனநிலையை, 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்து விடுவேன். நீங்கள் விரும்பியபடி நல்ல கூட்டணியை ஏற்படுத்துவேன். ஜாதி வாரி கணக்கெடுப்பு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதல்வரை கோட்டையில் சந்தித்து முறையிட்டேன்; ஆனாலும், இதுவரை கிடைக்கவில்லை.
முதல்வர், 10.5 சதவீத இட ஒதுக்கீடை சாதாரணமாக ஒரே வாரத்தில் கொடுக்க முடியும்; ஆனாலும், செய்ய மறுக்கிறார்; முதல்வர் அதை செய்ய வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பை, மத்திய அரசு தான் எடுக்க முடியும் என்று தட்டிக்கழிக்கக் கூடாது. பல மாநிலங்களில் அதை செய்துள்ளனர். தேவையானால், அதற்காக போராட்டம் நடத்துவோம். இட ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை அறிவியுங்கள் என இளைஞர்கள் வற்புறுத்துகின்றனர். சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை, தமிழக அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.



'பா.ம.க.,வை கட்டுப்படுத்தாது'

அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் கே.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கை: பா.ம.க.,வின் அமைப்பு விதிகள், 15, 16ன் அடிப்படையில், பா.ம.க., பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச்செயலர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் நடக்க வேண்டும்.
அதன்படி, கடந்த 9ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல், தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பில் நேற்று நடத்தப்பட்டது பா.ம.க., பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள், பா.ம.க.,வை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us