தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/லஞ்சம் கேட்டதால் பதிலடி; பிச்சை எடுத்த விவசாயி

லஞ்சம் கேட்டதால் பதிலடி; பிச்சை எடுத்த விவசாயி

லஞ்சம் கேட்டதால் பதிலடி; பிச்சை எடுத்த விவசாயி


ADDED : மார் 06, 2024 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா அலுவலகத்தில், சின்னவீரம்பட்டியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, விவசாயி. இவர், தன் நிலத்திற்கான பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளார். இரு மாதங்களாக அதிகாரிகள் அலைக்கழித்ததோடு, லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர மறுத்த நிலையில், நேற்று காலை விண்ணப்பத்தின் நிலை அறிய, தாலுகா அலுவலகம் வந்தார். அதிகாரிகளிடம் கேட்ட போது, லஞ்சம் தந்தால் மட்டுமே மாறுதல் செய்ய முடியும் என கூறி, அவரது மனுவையும் துாக்கி எறிந்தனர்.

வேதனையடைந்த விவசாயி, தாலுகா அலுவலக வளாகத்தில், 'அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டும்; பிச்சை போடுங்கள்' என கூறி, துண்டை விரித்து, மனுவையும் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சு நடத்தி, விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்ததையடுத்து, விவசாயி போராட்டத்தை விலக்கினார்.

துாத்துக்குடியில் கைதி ஓட்டம்


துாத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜன் 30. பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். அண்மையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். விளாத்திகுளத்தில் கொலை முயற்சி வழக்கில் கைதானார். அந்த வழக்கில் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபடுத்தி விட்டு போலீசார் அவரை துாத்துக்குடி சிறைக்கு அழைத்து வந்தனர். பஸ்சில் வந்த அவர் நேற்று மாலை 5:30 மணியளவில் தூத்துக்குடி புது பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த பொது போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

வாலிபர் படுகொலை


தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த கிளிட்டஸ் மகன் ஜஸ்டின் 24. கப்பலில் வேலை செய்ய முயற்சி செய்தார். இதற்காக திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள கடல் சார் பயிற்சி கல்லூரியில் படிக்க வந்துள்ளார்.

கல்லூரிக்கு செல்லாத நிலையில் நேற்று காலை நவ்வலடி அருகே கோடவிளை கடற்கரையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் தூத்துக்குடியில் பெண்ணை காதலித்துள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து உவரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாயமான சிறுமி கொலை; மூட்டையில் உடல் மீட்பு


புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் நாராயணன், டாடா ஏஸ் வாகன டிரைவர். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். 2வது மகள் ஆர்த்தி, 9, அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ம் தேதி மதியம் 1:00 மணிக்கு வீட்டின் அருகில் ஆர்த்தி விளையாடிய போது மாயமானார். முத்தியால்பேட்டை போலீசார் கடத்தல் வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.

அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்ததில், வீட்டின் அருகே 100 மீட்டர் துாரத்தில் சிறுமி நடந்து செல்லும் காட்சி மட்டும் பதிவாகி இருந்தது. மாயமாகி 4 நாட்களாகியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு, சிறுமியின் வீட்டில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் மூட்டை கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சென்று மூட்டையை கைப்பற்றி பார்த்தபோது, சிறுமி ஆர்த்தி கை, கால்கள் கட்டப்பட்டு, உடலை வேஷ்டியால் சுற்றி சாக்கடையில் வீசியிருந்தது தெரிந்தது. இந்த தகவல் அறிந்த, சோலை நகரைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விரைவாக செயல்படவில்லை என குற்றம்சாட்டினர். இதற்கிடையே, சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அதே பகுதியில் கஞ்சா போதை கும்பலை சேர்ந்த மூவரை சந்தேகத்தின் படி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சித்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி, 51, விவசாய கூலி. இவரது தங்கை காந்திமதி, கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். மணப்பாறை அருகே செட்டி சித்திரம் கிராமத்தில், 1,200 சதுரடி காலி மனையை வையாபுரி, தங்கைக்கு வாங்கிக் கொடுத்தார். அவர்கள் வாங்கிய காலி மனைக்குரிய பட்டா பெயர் மாற்றம் செய்ய, ஆவணங்கள் ஆன்லைன் வாயிலாக சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

வையாபுரியை போனில் அழைத்து பேசிய சமுத்திரம், வி.ஏ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் சித்தாநத்தம் வி.ஏ.ஓ., சிவசெல்வகுமார், 41, பட்டா பெயர் மாற்றத்திற்கு, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். வையாபுரி தயங்கியதால், '1,000 ரூபாயாவது கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும்' என, வி.ஏ.ஓ., கண்டிப்புடன் கூறினார். தர விரும்பாத வையாபுரி, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான போலீசார், சிவசெல்வகுமார் நேற்று, 1,000 ரூபாய் லஞ்சம் பெற்ற போது, கையும், களவுமாக கைது செய்தனர்.

மாணவரை கடத்த முயற்சி என போலியாக பதிவிட்ட வாலிபர் கைது


திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டியில் பள்ளிக்குச் சென்ற மாணவரை வட மாநிலத்தினர் கடத்த முயற்சி என தனியார் 'டிவி' லோகோவை டவுன்லோட் செய்து போலியாக பதிவை 'வாட்ஸ் ஆப்'பில் பரவ விட்டவரை போலீசார் கைது செய்தனர்.

ம.பி.,யில் பகுஜன் சமாஜ் பிரமுகர் சுட்டுக்கொலை


மத்திய பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டத்தின் ஈஷா நகரைச் சேர்ந்தவர் மகேந்திர குப்தா. இவர், கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜாவர் தொகுதியில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்டு, 10,400 ஓட்டுகளுடன் மூன்றாவது இடம் பெற்று தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சத்தர்பூரில் நடந்த திருமண நிகழ்வில் இவர் பங்கேற்க சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், மகேந்திர குப்தாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த மகேந்திர குப்தா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

கர்நாடக முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்


இந்திய மதிப்பில் 41.5 கோடி ரூபாய் கேட்டு, கர்நாடக முதல்வர், துணை முதல்வர், உள்துறை அமைச்சர், பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு இ - மெயிலில் மிரட்டல் வந்துள்ளது. 'பணம் தராவிட்டால் மாநிலம் முழுதும் குண்டு வெடிக்க செய்வோம்' என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதவை எரித்து கொலை; ஆண் நண்பர் கைது


கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சரிதா, 46. கணவரை இழந்த இவர், தன் மகள் மற்றும் தாயுடன் வசித்து வந்தார். இவரது ஆண் நண்பர் பினு, 50. நேற்று முன்தினம் இரவு சரிதா வீட்டிற்கு சென்ற பினு, அவரை வெளியே வரும்படி அழைத்துஉள்ளார். வெளியே வந்து பேசிக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, தான் வைத்திருந்த பெட்ரோலை சரிதா மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுக்க தீ பரவி, அவர் அலறி துடித்து ஓடிய போது, பினு மீதும் தீ பற்றியது. உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர் அருகில் இருந்த கிணற்றில் குதித்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தந்தனர். போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரிதா உயிரிழந்தார். 70 சதவீத காயங்களுடன் பினுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பினு மீது கொலை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us