பொதுத்துறை நிறுவனங்களில் ஆக்கிரமிக்கும் ஓய்வு அலுவலர்கள்; தி.மு.க., தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?
பொதுத்துறை நிறுவனங்களில் ஆக்கிரமிக்கும் ஓய்வு அலுவலர்கள்; தி.மு.க., தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?
UPDATED : மே 26, 2025 06:39 AM
ADDED : மே 26, 2025 06:34 AM

மதுரை: தமிழகத்தில், பொதுத்துறை நிறுவனங்களான கழகங்கள், வாரியங்களில் உயர் பதவிகளில் ஓய்வு பெறுவோர், பணியில் மீண்டும் தொடரும் நிலை அதிகரிப்பதால், வழக்கமான பணி நியமனம் நடைமுறை பாதித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மின்வாரியம், ரப்பர் கார்ப்பரேஷன், அரசு சிமென்ட், தொழில் மேம்பாட்டு கழகம், சிப்காட் தொழில் வளர்ச்சிக் கழகம், டான்சி உட்பட 40க்கும் மேற்பட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இங்கு, 50,000த்திற்கும் மேற்பட்டோர் நிரந்தரமாக, 1,000த்திற்கும் மேல், 'அவுட்சோர்ஸிங்' முறையிலும் பணியில் உள்ளனர்.
இந்நிறுவனங்களில், 2021 முதல் ஓய்வு பெற்ற கம்பெனி செகரட்டரி, பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், மேலாளர் இடங்களில் அவர்களே பணி நீட்டிப்பில் தொடர்கின்றனர். 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
அதே நேரம், காலிப் பணியிடங்களில் குறைந்த சம்பளம், எண்ணிக்கையில் நிரப்புகின்றனர். ஒரு அலுவலகத்தில் ஒரே பதவி, ஒரே கல்வித் தகுதியில் அதிக சம்பள இடைவெளியில் பணியாற்றுகின்றனர்.
இதுகுறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், வேலை வாய்ப்பு, திறன் பயிற்சி என்ற தலைப்பில் ஆண்டுக்கு தலா 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை நிறைவேற்றவில்லை. காலிப் பணியிடங்களாவது நிரப்பப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது ஓய்வு பெறுவோருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய அவுட்சோர்ஸிங் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வருவாய், ஹிந்து சமய அறநிலைத்துறைகளில் நிரந்தரம் செய்தனர்.
ஆனால், பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்களில் பணி நிறைவு பெற்ற பணியாளர்களையே மீண்டும் பணியில் தொடர அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு பணியின் போது இருந்த அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், பணியாளர் தேவை குறித்து உரிய அறிக்கை, அரசுக்கு அளிப்பது இல்லை. இதன் காரணமாக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதித்துள்ளது. அவுட்சோர்ஸிங் முறையில் தகுதியுடன் பணியாற்றுவோரை நிரந்தரப்படுத்துவது, காலியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நிரப்புவது போன்ற நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.