ADDED : நவ 20, 2025 01:19 AM
சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி புறக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, வருவாய் துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடந்து வருகின்றன. சரியான திட்டமிடல் இல்லாததால், தங்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதாக, வருவாய் துறை அலுவலர்கள் புகார் தெரிவித்தனர். இப்பணியை புறக்கணிக்கப்போவதாக, அந்த சங்கங்கள் அறிவித்தன.
இந்நிலையில், வருவாய் துறை செயலர் அமுதாவை, கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். அலுவலர்களுக்கு அதிக பணி நெருக்கடி தொடராது என, அவர் உறுதி அளித்தார்.
மேலும், ஓட்டுச்சாவடி அலுவலர், கண்காணிப்பாளருக்கான ஊக்க ஊதியத்தை உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் பணியிடங்களுக்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.
இதையடுத்து, வாக்காளர் பட்டியல் திருத்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஒத்திவைப்பதாக, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

