பட்டா பிழைகளை சரி செய்வதில் வருவாய் துறையினர் அலட்சியம் கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிப்பு
பட்டா பிழைகளை சரி செய்வதில் வருவாய் துறையினர் அலட்சியம் கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிப்பு
ADDED : டிச 17, 2024 10:27 PM
சென்னை:பட்டாக்களில் காணப்படும் பரப்பளவு உள்ளிட்ட பிழைகளை சரி செய்வது தொடர்பான கோப்புகள், வருவாய் துறையில் கிடப்பில் போடப்படுவதால், கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதில், பத்திரம், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், கணினியில் உள்ளீடு செய்யப்படும் நிலையில், பரப்பளவு, பெயர் உள்ளிட்டவற்றில் வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இந்த பிழைகளை சரி செய்தால் மட்டுமே, விண்ணப்பத்தை கணினி ஏற்கும்.
புகார்
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படும் பட்டாக்களில், பரப்பளவு உள்ளிட்ட விபரங்கள் பிழையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வருவாய் துறை நடைமுறைகளின் அடிப்படையில், இதுபோன்ற பிழைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் திருத்தம் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான வருவாய் கோட்டாட்சியர்கள், இதுபோன்ற பிழைகளை சரி செய்வது தொடர்பான முடிவை எடுக்காமல், கிடப்பில் போடுவதாக புகார் எழுந்துள்ளது.
அனுமதி பாதிப்பு
இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
கட்டுமான திட்ட அனுமதி உள்ளிட்ட பணிகள், 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதனால், பட்டா போன்ற ஆவணங்கள் குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், 'ஆன்லைன்' முறையில் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
பொதுவாக, பத்திரங்களில் சதுர அடி அடிப்படையிலும், பட்டாவில், 'ஏர்' கணக்கிலும் நிலத்தின் பரப்பளவு குறிப்பிடப்படுகிறது. ஒரு ஏர் என்பது, 1,076 சதுர அடி. இதில், சிறிய அளவு வேறுபாடு இருக்கும். இதனால், பத்திரத்தை விட பட்டாவில், 50 முதல், 70 சதுர அடி வரை குறைந்து காண வாய்ப்புள்ளது.
இதை சரி செய்து கொடுக்க விண்ணப்பித்தால், அதில் கோட்டாட்சியர்கள் விசாரணையே மேற்கொள்வதில்லை. தங்களுக்கு வேறு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி, அலட்சியம் காட்டுகின்றனர்.
பட்டா பிழைகளை சரி செய்ய வேண்டியது, தற்போது மிக முக்கியமானதாக உள்ளது. வருவாய் துறை அதிகாரிகள், இதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்த எளிய வழி என்ன?
ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.தர்மராஜன் கூறியதாவது:
பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, ஆன்லைன் முறைக்கு மாற்றியது முதல், பிழைகள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, 60 சதவீத பட்டாக்களில் பிழைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில், அடுத்தடுத்த பரிமாற்றம், வங்கிக்கடன், கட்டட அனுமதி போன்ற விஷயங்களுக்கு செல்வோர் மட்டுமே புகார் செய்கின்றனர். மற்றவர்கள் இன்னும் பிழைகள் இருப்பதை அறியாமல் உள்ளனர்.
தனியாக ஒரு இணையதளம் ஏற்படுத்தி, அதில் வருவாய் துறையிடம் இருக்கும் பட்டா விபரங்களை வெளியிட வேண்டும். அதில், பிழையான பட்டாக்கள் தொடர்பான சரியான விபரங்களுக்கான ஆதாரங்களை, பொது மக்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதன் அடிப்படையில் பிழை திருத்தும் பணிகளை, வருவாய் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இதனால், இப்பிரச்னை எளிதாக முடிவுக்கு வரும். இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.