ADDED : அக் 18, 2024 10:36 PM
சென்னை:கல்வராயன் மலைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை வசதி குறித்து, கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆஜராகி விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அடிப்படை வசதி களை அந்தப் பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, ''விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் பஸ்கள், போதுமான அளவில் இல்லை,'' என்றார்.
இதையடுத்து, கல்வராயன் மலைப்பகுதிக்கு தேவையான பஸ் வசதிகளை, நான்கு வாரங்களில் வழங்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பஸ் வசதி வழங்குவதற்கு, தேவையான சாலை வசதிகள் இல்லை என, விழுப்புரம் கோட்ட மேலாளர் அறிக்கை அளித்திருப்பதாக தெரிவித்தார்.
மலைப்பகுதி
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்வ ராயன் மலைப்பகுதியில், 95 சதவீத சாலை வசதி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, கல்வ ராயன் மலைப்பகுதியில், வாகன போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சாலை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், வரும் 22ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

