மூதாட்டி பலாத்கார வழக்கு தப்பிக்க முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு
மூதாட்டி பலாத்கார வழக்கு தப்பிக்க முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு
ADDED : ஜூன் 17, 2025 11:52 PM

பண்ருட்டி:பண்ருட்டி அருகே, 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வழக்கில், போலீசாரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 80 வயது மூதாட்டி. இவர், நேற்று முன்தினம் வீட்டு அருகேயுள்ள சவுக்கு தோப்பிற்கு இயற்கை உபாதைக்காக சென்றார். அங்கிருந்த மர்ம நபர், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து, அவர் அணிந்திருந்த 4 கிராம் மூக்குத்தியை பறித்துச் சென்றார்.
மூதாட்டியின் அலறல் கேட்டு, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, சம்பவம் நடந்த இடம் அருகே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், மொபைல் போன் பதிவுகள் அடிப்படையில் மர்ம நபரை தேடினர்.
அதில், பண்ருட்டியை அடுத்த எஸ்.கே.பாளையத்தை சேர்ந்த சுந்தரவேல், 25, என்பவர், மூதாட்டியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை தேடிய நிலையில், மேல்மாம்பட்டு பழைய ஆலை பின்புறம், முந்திரிதோப்பில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் தனிப்படை போலீசார், நேற்று பகல் 11:45 மணிக்கு அங்கு சென்றனர். சுந்தரவேலை, காவலர்கள் குபேந்திரன், 34, ஹரிஹரன், 37, ஆகியோர் பிடிக்க முயன்ற போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால், காவலர் குபேந்திரனின் கையில் வெட்டினார்.
உடன், இன்ஸ்பெக்டர் வேலுமணி, துப்பாக்கியை காட்டி சரணடைய எச்சரித்தார். ஆனாலும், சுந்தரவேல், காவலர் ஹரிஹரனை வெட்ட முயன்றார். அப்போது, இன்ஸ்பெக்டர் வேலுமணி, சுந்தரவேல் காலில் துப்பாக்கியால் சுட்டதில் அவர் மயங்கி விழுந்தார்.
சுந்தரவேலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். காவலர்கள் குபேந்திரன், ஹரிகரன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுந்தரவேல் மீது திருச்சி கன்டோன்மென்ட், கோவை, ஈரோடு, திருவெண்ணைநல்லுார் போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் உள்ளார். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை எஸ்.பி., ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
எஸ்.பி., கூறுகையில், “இவ்வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல், கடந்த மார்ச்சில் திருச்சி கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனில் பதிவான வழக்கில் இரு நாட்களுக்கு முன் வெளியே வந்தார். ஒரு பைக்கை திருடி, மாலையில் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். கூட்டு பலாத்காரம் இல்லை.
''இருப்பினும், வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரிக்கிறோம். சுந்தரவேல் பைக்கில் இருந்த இரு மோதிரம் உள்ளிட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,” என்றார்.