கடலுார் மற்றும் துாத்துக்குடியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.10 கோடி
கடலுார் மற்றும் துாத்துக்குடியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.10 கோடி
ADDED : நவ 25, 2025 06:58 AM

சென்னை: கடலுார், துாத்துக்குடி மாவட்டங்களில், கடல் அரிப்பை தடுக்க, உயிர் கேடயங்கள் உருவாக்கும் பணிக்கு, 10 கோடி ரூபாய் ஒதுக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
தமிழகத்தில், 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி தாக்கியது. அதன்பின், கடலோர பகுதிகளில், சுற்றுச்சூழல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. சுனாமியின் போது, அலையாத்தி காடுகள் இருந்த பகுதிகளில், பாதிப்பு ஏற்படவில்லை.
மேலும், அலையாத்தி மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், கடல் அரிப்பு தடுக்கப்படுவதும், ஆய்வுகளில் தெரியவந்தது.
இதை கருத்தில் வைத்து , கடலோர பகுதிகளில், அலையாத்தி மரங்கள் வளர்ப்பு பணியில், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
கடலுார் மட்டுமல்லாது, சென்னையில் அடையாறு, எண்ணுார் முகத்துவாரப் பகுதிகள், பழைய மாமல்லபுரம் சாலையில், பகிங்ஹாம் கால்வாய் போன்ற இடங்களில், அலையாத்தி மரங்கள் வளர்ப்பு பணிகளை வனத்துறை முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், கடலுார், துாத்துக்குடி மாவட்டங்களில் கடல் அரிப்பு ஏற்பட, அதிக வாய்ப்பிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடலுார், துாத்துக்குடி மாவட்டங்களில் கடல் அரிப்பை தடுக்க, உயிர் கேடயங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அலையாத்தி மரங்களை, அதிக அளவில் வளர்க்க, சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, 10 கோடி ரூபாய் ஒதுக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

