அரசுக்காக ஆஜரான வக்கீல்களுக்கு ரூ.20 கோடி கட்டண பாக்கி
அரசுக்காக ஆஜரான வக்கீல்களுக்கு ரூ.20 கோடி கட்டண பாக்கி
ADDED : செப் 19, 2025 01:48 AM
சென்னை:தமிழக அரசுக்காக, பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு, 20 கோடி ரூபாய் கட்டண பாக்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு எடுக்கும் முடிவுகள், செயல்படுத்தும் திட்டங்கள் தொடர்பாக, பொதுமக்கள், அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் சார்பில் வழக்குகள் தொடரப்படுகின்றன. இதில், அரசின் துறைகள் மட்டுமல்லாது, பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் வழக்குகள் வருகின்றன.
இதுபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வந்தால், அரசு சார்பில் ஆஜராக, துறை வாரியாக வழக்கறிஞர் குழுக்கள் உள்ளன.
இவர்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில வழக்குகளில் சம்பந்தப்பட்ட துறையின் கோரிக்கை அடிப்படையில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராவது வழக்கம். இவ்வாறு சிறப்பு நிகழ்வாக மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகும் போது, அவர்களுக்கான கட்டணங்களை சம்பந்தப்பட்ட துறைகள் செலுத்த வேண்டும்.
உயர் நீதிமன்றம் மட்டுமல்லாது, உச்ச நீதிமன்றத்திலும், தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர்.
இவர்களுக்கான கட்டணம் தொடர்பான கடிதங்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப் படுகின்றன. அவற்றுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் உடனடியாக ஒப்புதல் அளித்து, கட்டண தொகையை செலுத்துவதில்லை.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக அரசின் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆய்வு கூட்டம், சில நாட்களுக்கு முன் நடந்தது. அப்போது, பொதுத்துறை செயலர் சில புள்ளி விபரங்களை தாக்கல் செய்தார்.
அதில், அரசின் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்காக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக, 20 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு வழக்கு விசாரணை முடிந்த பின்னும், இது தொடர்பான கடிதங்கள், அரசின் தலைமை வழக்கறிஞர் வாயிலாக துறைகளுக்கு அனுப்பப் படுகின்றன.
இதில் உள்துறை, எரிசக்தி, நகராட்சி நிர்வாகம், வணிக வரி ஆகிய துறைகள் பெயரில் தான் அதிக தொகை நிலுவையில் இருப்பதாக, பொதுத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலுவைத் தொகைகளை உடனடியாக செலுத்துமாறு, அந்தந்த துறை உயரதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாது, வரும் காலங்களில் இதுபோன்ற தொகைகளை நிலுவை வைக்காமல் உடனுக்குடன் செலுத்தவும், அரசு அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.