ADDED : மே 28, 2025 02:30 AM
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மயான ரோட்டில் இக்கோயிலுக்கு சொந்தமான முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது.
இதை சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 2019 ல், நிலத்தை கையகப்படுத்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அப்பணி தாமதமானது. இதையடுத்து ஏப்ரலில் ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் மதுரை இணை ஆணையர் நீதிமன்றம் உடனடியாக நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டது. ஆனாலும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து விருதுநகர் ஹிந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் நாகராஜன் நேற்று முன்தினம் கோயில் நிலத்தை கையகப்படுத்தும் பொறுப்பை, மீனாட்சி சொக்கநாதர் கோயில் செயல் அலுவலர் தேவியிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து அவருடன் சாத்துார் வெங்கடாசலபதி கோயில் செயல் அலுவலர் லட்சுமணன், அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயில் செயல் அலுவலர் ராமதிலகம், கோயில் ஆய்வாளர் சந்திரமோகன், கோயில் நிலங்கள் தாசில்தார் மாரியப்பன், டவுன் ஆர்.ஐ., சொர்ணலட்சுமி, எஸ்.ஐ., வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மீட்டனர்.