ADDED : பிப் 08, 2025 12:30 AM
சென்னை:'ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவரால், தள்ளி விடப்பட்டு காயமடைந்த பெண்ணுக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை:
கோவை - திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில், நேற்று முன்தினம் காலை பயணித்த, பெண் பயணியை தள்ளிவிட்டதில், காயமடைந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
கிராமவாசிகளால் அவர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரயில்வே போலீசார் விசாரணையில், ஜோலார்பேட்டை நிலையத்தில் கடைசி நேரத்தில், குடிபோதையில் இருந்த ஒருவர் ஓடும் ரயிலில் ஏறி பெண்கள் பெட்டிக்குள் நுழைந்தது கண்டறியப்பட்டது.
அந்த பெட்டியில், தனியே பயணித்த நான்கு மாத கர்ப்பிணியை, அந்த நபர் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அவர் துணிச்சலுடன் எதிர்த்ததால், ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
அந்த பெண் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் எடுத்த விரைவான நடவடிக்கையால், சம்பவம் நடந்த, 12 மணி நேரத்திற்குள், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த பெண் பயணிக்கு, இன்று 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது.
பயணியர் அவசரத்திற்கு, ரயில்வே உதவி எண் 139ஐ தொடர்பு கொள்ளலாம். முக்கியமான ரயில் நிலையங்களில், தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற ரயில் நிலையங்களிலும், ஏப்ரல் மாதத்திற்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.