100 பஸ்கள் வாங்க ரூ.91 கோடி தாங்க! சி.எம்.டி.ஏ.வுக்கு எம்.டி.சி. கடிதம்
100 பஸ்கள் வாங்க ரூ.91 கோடி தாங்க! சி.எம்.டி.ஏ.வுக்கு எம்.டி.சி. கடிதம்
ADDED : ஜன 22, 2024 04:41 AM

சென்னை : 'வெளியூர் செல்வோர் வசதிக்காக, 100 தாழ்தள பஸ்கள் வாங்க, 91 கோடி ரூபாய் நிதி உதவி வேண்டும்' என, எம்.டி.சி.,யான மாநகர போக்குவரத்து கழகம், சி.எம்.டி.ஏ.,வான சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்காக, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதி மக்களும், கிளாம்பாக்கம் செல்ல, மாநகர பஸ்கள் பிரதான தேவையாக உள்ளன.
இது தொடர்பாக, மாநகர் போக்குவரத்து கழகம், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்:
சென்னையில் தற்போதைய நிலவரப்படி, தினமும், 659 வழித்தடங்களில், 3,233 நடைகள் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், கிளாம்பாக்கத்துக்கு மக்கள் சென்று வர, தினமும், 298 பஸ்களை, 2,990 முறை இயக்க வேண்டியுள்ளது. இதற்காக வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள், கிளாம்பாக்கத்துக்கு மாற்றி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதிக சுமைகளுடன் வெளியூர் செல்வோரின் தேவை கருதி, அதிநவீன வசதிகள் உடைய, 100 தாழ்தள பஸ்கள் வாங்க திட்டமிட்டு, தமிழக அரசு வாயிலாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எனவே, புதிய பஸ்கள் வாங்கும் செலவை சமாளிக்க, 91 கோடி ரூபாயை, சி.எம்.டி.ஏ., நிதியில் இருந்து கொடுத்து உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ.,வின், 50 ஆண்டு கால வரலாற்றில், முதல்முறையாக பஸ்கள் வாங்க நிதி உதவி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.