ADDED : ஏப் 18, 2026 06:25 AM

காரைக்குடியில், காங்., வேட்பாளர் மாங்குடி போட்டியிடுகிறார். அவருடன் பிரசாரத்திற்கு செல்லும் தி.மு.க., நிர்வாகிகள் சிலர், தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி ஓட்டு கேட்கின்றனர்.
குறிப்பாக, பெண்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் வழங்கியதை குறிப்பிட்டு, கூட்டத்தில் ஒரு பக்கத்தை பார்த்து, 'உங்கள் எல்லாருக்கும் 5,000 ரூபாய் வந்து விட்டதா?' எனக் கேட்கின்றனர். பலர், வரவில்லை என்கின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்காமல், 'உங்களுக்கு வந்து விட்டதா?' என்று மற்றவர்கள் பக்கம் திரும்புகின்றனர். 'வந்தாச்சு' என்றவுடன், 'எதற்காக ஒரே நேரத்தில் பணம் போட்டார் என்று தெரியுமா?' என்று அடுத்த கேள்வியை எழுப்புகின்றனர்.
'ஓட்டு போடுவதற்கு தான்; வேறு எதற்கு?' என்று மக்கள் நக்கலாக பதிலளிப்பதால் நிர்வாகிகள், அடுத்த சாதனைக்கு சென்று விடுகின்றனர். மேலும், 8,000 ரூபாய் கூப்பனை பற்றி பேசினால், ஒரு மாத மளிகை சாமானுக்கு கூட பத்தாது என்றும் கிண்டலடிக்கின்றனர்.
