தமிழக பா.ஜ., பொறுப்பில் இருந்து கேசவ விநாயகன் மாற்றப்பட்டது ஏன்; ஆர்.எஸ்.எஸ்., விளக்கம்
தமிழக பா.ஜ., பொறுப்பில் இருந்து கேசவ விநாயகன் மாற்றப்பட்டது ஏன்; ஆர்.எஸ்.எஸ்., விளக்கம்
ADDED : பிப் 10, 2026 07:53 PM

சென்னை: வழக்கமான நடைமுறையின் அடிப்படையில்தான், தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகன் விடுவிக்கப்பட்டதாக, ஆர்.எஸ்.எஸ்., விளக்கம் அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியரான கேசவவிநாயகன், கடந்த 2015 மார்ச் 15ல், தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார். அவர், பா.ஜ.,விலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.,சில் அழைக்கப்பட்டு, அதன் மாநில சமூக நல்லிணக்க பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளாக, பா.ஜ.,வின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரை, சட்டசபை தேர்தலுக்கு 60 நாட்களே உள்ள நிலையில் விடுவித்தது, கட்சிக்குள் ஆச்சரியத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., தென்பாரத செய்தி தொடர்பாளர் ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள், நிர்வாக காரணங்களுக்காக, பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது, பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன் அடிப்படையில், பா.ஜ., மாநில அமைப்பு பொதுச்செயலர் பொறுப்பில் வேலை செய்து வந்த கேசவ விநாயகன் மாற்றப்பட்டுள்ளார். அவர், இனி, ஆர்.எஸ்.எஸ்., மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளராக செயல்படுவார். ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக செயற்குழு உறுப்பினராகவும் செயல்படுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

