கட்சி கூட்டங்கள் நடத்த விதிமுறைகள்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல்
கட்சி கூட்டங்கள் நடத்த விதிமுறைகள்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல்
UPDATED : நவ 21, 2025 11:55 PM
ADDED : நவ 21, 2025 11:50 PM

சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின், 'ரோடு ஷோ' மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய வரைவு வழிகாட்டி விதிமுறைகளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27ல், கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர்.
இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசியல் கட்சித் தலைவர் களின் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு, எஸ்.ஓ.பி., எனும் நிலையான வழிகாட்டு விதி முறைகளை வகுக்கக் கோரியும், துாத்துக்குடியைச் சேர்ந்த திருக்குமரன், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் த.வெ.க., தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கெடு விதிப்பு
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், வரைவு வழிகாட்டி விதிமுறைகளை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய, 46 பக்கங்கள் கொண்ட வரைவு வழிகாட்டி விதிமுறைகளை தாக்கல் செய்தார்.
த.வெ.க., தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, ''வரைவு வழிகாட்டி விதிமுறைகளின் நகல் வழங்கப்படவில்லை,'' என்றார்.
இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''தற்போதைய நிலையில் த.வெ.க., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், இந்த நகலை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால், நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் இறுதி நிலையை எட்டாது.
''இருப்பினும், அனைத்து அரசியல் கட்சிகளின் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்ட பிறகே, வரைவு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன,'' என்றார்.
வழக்கு தொடரலாம்
மேலும் அவர், ''20 அங்கீகரிக்கப்பட்ட மற்றும், 40 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. ஒரு கட்சியுடன் பகிர்ந்து கொண்டால், மற்ற கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
''ஒருவர் உடன்படுவர்; ஒருவர் உடன்படாமல் போவர். வழிமுறைகள் வகுக்கும் முன், அனைவரின் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம்,'' என்றார்.
இதற்கு, த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வரைவு வழிகாட்டி
விதிமுறைகளின் நகல் வழங்கும்படி கோரினர்.
த.வெ.க., தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா வாதாடியதாவது:
'ரோடு ஷோ' நடத்தும் இடம் எது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கலெக்டருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு ஒரு இடத்தை முடிவு செய்யும் முன், அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்க வேண்டுமா; அதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
ரோடு ஷோ அனுமதி கோரும் விண்ணப்பத்தை, காவல் துறை எந்த நேரத்தில் முடிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெளிவாக இல்லை. எஸ்.ஓ.பி.,யில் கோவில் விழாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கோவில் விழாக்களிலும் துயர சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு வகுத்துள்ள வரைவு வழிகாட்டி விதிமுறைகளை, வழக்கு தொடர்ந்த த.வெ.க., - அ.தி.மு.க., மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வழங்க உத்தரவிட்டனர். மேலும், அதன் மீதான கருத்துக்களை, சம்பந்தப்பட்ட கட்சிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும், 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
@block_B@ 2 மணி நேரத்திற்கு முன்பே கூட்டம் சேர்க்கக்கூடாது சேதத்திற்கான இழப்பீட்டை கட்சிகளே ஏற்க வேண்டும் அரசு தாக்கல் செய்துள்ள வரைவு வழிகாட்டி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ரோடு ஷோ, பெரிய அளவிலான நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தும் ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விபரம்:
* ஐந்தாயிரம் பேருக்கு மேல் திரள்வர் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் கலாசார, மத நிகழ்வுகளுக்கு, இந்த விதிகள் பொருந்தும். ஆனால், வழிப்பாட்டு தலங்களில் நடக்கும் மத ரீதியான கூட்டங்களுக்கு, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தாது
* நடத்தை விதிகள் அமலில் இருக்கும் தேர்தல் நேரங்களில், தேர்தல் கமிஷன் வெளியிடும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும்
* கூட்ட கட்டுப்பாடு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்க செய்யும் இந்த விதிகளை அமல்படுத்துவது, கூட்ட ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு
* ஐந்தாயிரத்துக்கும் குறைவாக மக்கள் திரளும் கூட்டங்களுக்கு, இது பொருந்தாது. ஆனால், தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் தொடரும்
* பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ேஷா, ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவை நடக்க உள்ள இடங்களை, காவல் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து, மாவட்ட கலெக்டர் முடிவெடுத்து அறிவிப்பார்
* பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் முன், என்ன தேதி, நேரம், எதற்காக நடத்தப்படுகிறது, எவ்வளவு மக்கள் பங்கேற்பர், எத்தனை வாகனங்கள் வரும், பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விபரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்
* ரோடு ஷோக்களை பொறுத்தவரை, தலைவர்கள் பிரசாரத்தை துவங்கும் இடம், முடிக்கும் இடங்களையும், பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்களையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும் * தலைமை விருந்தினர்கள் வருகை தரும் நேரம், புறப்படும் நேரத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்
* இது மாதிரியான நிகழ்வுகளில், மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்க முடியும் என்பதை, பொதுப்பணித் துறை பொறியாளர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து, சான்றிதழ் அளிக்க வேண்டும். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பொதுப்பணி துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்
* தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், பொதுக்கூட்டம், ரோடு ஷோக்கள் நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை பெற வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு, 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்
* ஐம்பது ஆயிரம் பேருக்கு மேல் திரளும் கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு, 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். திடீரென ஏற்பாடு செய்யப்படக்கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களை பொறுத்தவரை, மாவட்ட கலெக்டரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
* விண்ணப்பங்களில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்
* நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு
* நிகழ்ச்சியின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்
* நிகழ்ச்சி முடிந்த பின், அந்த இடத்தை முழுமையாக துாய்மை செய்து வழங்க வேண்டும்
* கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல், அவர்கள் பாதுகாப்பாக பங்கேற்க, அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தான் செய்ய வேண்டும்
* நிகழ்ச்சி துவங்குவதற்கு, 2 மணி நேரத்திற்கு முன்னரே, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பல விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. ***

