'பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்' திட்டத்திற்கு விதிகள் வெளியீடு
'பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்' திட்டத்திற்கு விதிகள் வெளியீடு
ADDED : மே 19, 2026 01:21 AM

சென்னை: தமிழகத்தில் மின்சாரத்தை சேமிக்கும் 'பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்' திட்டத்திற்கான விதிமுறைகளை வகுக்க, வரைவு விதிகளை வெளியிட்டு, மக்களிடம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்டுள்ளது.
தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சூரியசக்தி, காற்றாலையை உள்ளடக்கிய, புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பில் சேமித்து, தேவை உள்ள நேரங்களில் பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில், 17 இடங்களில், 2,500 மெகா வாட் மின்சாரத்தை சேமித்து, இரவில் பயன்படுத்தும் பேட்டரி கட்டமைப்பை, தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, தமிழக மின் வாரியம் அமைத்து வருகிறது.
தற்போது தான், அத்திட்டத்திற்கான விதிமுறைகளை வகுக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, அத்திட்டத்தை செயல்படுத்தும் தொழில்நுட்ப தரநிலை, மின் கொள்முதல் கட்டணம் நிர்ணயம், ஒப்பந்த நடைமுறைகள், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றை உள்ளடக்கிய வரைவு விதிகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக, தங்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை, 4வது தளம், 'சிட்கோ' தலைமை அலுவலக கட்டடம், கிண்டி, சென்னை - 3 முகவரிக்கு, வரும், 30ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, ஆணையம் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்ப, இறுதி விதிகள் வெளியிடப்படும்.
