'பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்கள் பாதுகாப்பு'
'பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்கள் பாதுகாப்பு'
ADDED : நவ 23, 2025 12:58 AM

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை, பெண்களின் பாதுகாப்பு பல்லிளிக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள தர்காவில், 'அஸ்ரத்' ஆக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் அஜீஸ் என்பவர், நேற்று முன்தினம் புனித நீர் தெளிப்பதற்காக, குழந்தையுடன் தர்காவிற்கு வந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கத்தியால் குத்தி தாக்கியதாக, வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
படி க்கும் பள்ளி முதல், புனிதமான பள்ளிவாசல் வரை, பாலியல் கரங்கள் பெண்களை தொடர்கிறது என்றால், தி.மு.க., அரசையும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும், சட்டம் -ஒழுங்கையும், குற்றவாளிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று தானே அர்த்தம்.
அதிலும், அப்துல் அஜீஸ் மீது, ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக, செய்திகள் உலா வரும் நிலையில், அவர் தர்காவின் தலைவராக எப்படி நியமிக்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்டத்தையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள, இச்சம்பவம் குறித்து, தி.மு.க.,வின் போலி பெண் போராளிகளும், பிற தலைவர்களும், இதுவரை வாய் திறக்காதது ஏன். முஸ்லிம் மக்களின் ஓட்டு வங்கி அடி வாங்கிவிடும் என்ற அச்சமா.
அல்லது வழக்கம் போல், இந்த பாலியல் வழக்கிலும் உடன்பிறப்புகள் ஒளிந்துள்ளனரா. சமூகநீதி, மத நல்லிணக்கம் குறித்தெல்லாம், பிறருக்கு வகுப்பெடுக்கும் தி.மு.க., அரசு, இந்த விவகாரத்தை, எவ்வித சமரசமும் இல்லாமல் அணுக வேண்டும்.
குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதோடு, முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

