திருப்பரங்குன்றம் மலையில் தடையை மீறி ஆடு, கோழி அறுத்து சமபந்தி விருந்தா
திருப்பரங்குன்றம் மலையில் தடையை மீறி ஆடு, கோழி அறுத்து சமபந்தி விருந்தா
ADDED : ஜன 18, 2025 07:08 AM

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் விதமாகவும், முருகபெருமானை அவமதிக்கும் விதமாகவும், ஹிந்துக்கள் மனம் புண்படும் விதமாகவும் தடையை மீறி இன்று(ஜன.,18) ஆடு, கோழி அறுத்து சமபந்தி விருந்து நடத்த போவதாக சில முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சமீபத்தில் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்ற ஒருவர், ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் மணப்பாறை தி.மு.க., எம்.எல்.ஏ., அப்துல்சமது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தார்.
இதற்குரிய பதில் கேட்டு கலெக்டர் சங்கீதாவுக்கு சட்டசபையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. தொடர் ஜல்லிக்கட்டு காரணமாக அடுத்த வாரம் பதில் அனுப்ப முடிவு செய்திருந்த நிலையில், சில அமைப்புகள் தடையை மீறி இன்று ஆடு, கோழி அறுத்து சம்பந்தி விருந்து கொடுக்கப்போவதாக அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனால் மலை மீது யாரும் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது: சில நாட்களாக திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், மலை முழுவதும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும்,
மலை மீது ஆடு மாடு கோழி பலி கொடுப்போம் என்றும் கூறி வருகின்றனர். மலை மீது அத்துமீறி ஆடு வெட்ட முயன்றவர்களை போலீசார் தடுத்ததை 'வழிபாட்டு உரிமையை பறிப்பதாக' பொய்யாக கூறி பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரில் 'திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் தொழுகை நடத்த எந்த தடையும் இல்லை. மலை மீது ஆடு பலி கொடுக்க வேண்டுமென்றால் நீதிமன்றத்தை நாடலாம்' என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதை மீறி 'சமூகநல்லிணக்கத்திற்கான சமபந்தி விருந்து' என்று போர்வையில் மலை மீது உயிரினங்களை பலி கொடுக்க திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ள இச்செயல் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானை அவமதிக்கும் செயல். இதை பக்தர்கள், ஹிந்துக்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்னையையும், மத மோதலையும் உண்டாக்க வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.