துாய்மை பணியாளர்கள் போராட்டம் நிறைவு: அமைச்சர் சேகர்பாபு பேச்சில் உடன்பாடு
துாய்மை பணியாளர்கள் போராட்டம் நிறைவு: அமைச்சர் சேகர்பாபு பேச்சில் உடன்பாடு
ADDED : ஜன 13, 2026 05:21 AM

அம்பத்துார்: துாய்மை பணியாளர்கள் நடத்தி வந்த போராட்டம், அமைச்சர் சேகர்பாபு நேற்று நடத்திய சமரச பேச்சின் வாயிலாக முடிவுக்கு வந்துள்ளது. துாய்மை பணியாளர்களுக்கு, மாநகராட்சியின் கீழ் வேலை வழங்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் துாய்மை பணியை, தனியார் நிறுவனத்திடம், சென்னை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியது.
இதை கண்டித்தும், மாநகராட்சியின் கீழ் பணி கோரியும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த, 1,400க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அம்பத்துாரில் உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில், பெண் துாய்மை பணியாளர்கள், 12 பேர், மூன்று கட்டங்களாக, 57 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், 11 பேர் உடல்நல குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், லட்சுமி, 40, என்பவர், 19வது நாளாக நேற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியாவுடன் நேற்று, உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்துக்கு சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர்களிடம், பேச்சு நடத்தினார்.
ஏற்கனவே இருந்ததுபோல், மாநகராட்சியின் கீழ் வேலை வழங்க வேண்டும். தினமும், 761 ரூபாய் சம்பளம் வேண்டும் என, துாய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையேற்ற சேகர்பாபு, ''நடந்தது நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லதாக நடக்கட்டும். மாநகராட்சியின் கீழ் அனைவருக்கும் பணி வழங்கப்படும். வாக்குறுதியை எந்த காலத்திலும் பின்வாங்க மாட்டோம்,'' என்று உறுதி அளித்தார்.
கடந்த 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த துாய்மை பணியாளர் லட்சுமிக்கு, பழச்சாறு கொடுத்து, போராட்டத்தை சேகர்பாபு முடித்து வைத்தார்.
பின் சேகர்பாபு அளித்த பேட்டி:
துாய்மை பணியாளர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என, முதல்வர் அறிவுறுத்தினார். சட்டம் - ஒழுங்கிற்கு பிரச்னை ஏற்படாமல், ஜனநாயக ரீதியில் போராட்டம் நடந்திய துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டுக்கள்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்த அனைவருக்கும் நன்றி.
இம்மாத இறுதிக்குள், அனைவருக்கும் சென்னை மாநகராட்சியின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். இந்த பொங்கல், துாய்மை பணியாளர்களுக்கு, மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும்.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சம்பளத்தை மீண்டும் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும். இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பும் உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு முடிந்ததை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

