ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு
ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு
ADDED : ஜன 16, 2025 07:44 PM

சென்னை: நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நில மோசடி தொடர்பாக தனது யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு இன்ஸ்பெக்டர் சிவ சுப்ரமணியன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது பாரதிய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, சவுக்கு சங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. விடுமுறைக்கு பிறகு நாளை( ஜன.,17) ல் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.சில வழக்குகளில் கைதான சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.