ADDED : ஜூன் 17, 2025 06:20 AM
சென்னை : டில்லி மதராஸி கேம்பில், வீடுகளை இழந்தவர்களுக்கு 8,000 ரூபாய் மற்றும் 4,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை, தமிழக அரசு வழங்க உள்ளது.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
டில்லி ஜங்புரா பகுதியில், 'மதராஸி கேம்ப்' எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை, மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்கு, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, டில்லி முதல்வர் ரேகா குப்தாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இந்நிலையில், டில்லி மதராஸி கேம்பில், பாதிக்கப்பட்ட 370 தமிழர்களின் குடும்பங்கள், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, ஒருமுறை நிதியுதவியாக 8,000 ரூபாய்; அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள் அடங்கிய, 4,000 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, ஆகியவற்றை வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

