போலி மருத்துவ சான்றிதழ் பெற்று 'ஸ்கிரைப்' சலுகை: 100 சதவீத தேர்ச்சி பெற பள்ளிகள் முறைகேடு
போலி மருத்துவ சான்றிதழ் பெற்று 'ஸ்கிரைப்' சலுகை: 100 சதவீத தேர்ச்சி பெற பள்ளிகள் முறைகேடு
ADDED : ஏப் 13, 2025 02:10 AM

கோவை: பொதுத்தேர்வுகளில் நுாறு சதவீத தேர்ச்சிக்காக, சில பள்ளிகள் முறைகேடான வழியில் மருத்துவ சான்று பெற்று, 'ஸ்கிரைப்' வாயிலாக மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2024 - 25ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 3 முதல், 25ம் தேதி வரை நடந்தது. 10ம் வகுப்புக்கு மார்ச், 28 முதல் வரும், 15ம் தேதி வரை நடக்கிறது.
சந்தேகம்
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ் 2 பொதுத்தேர்வை, 363 பள்ளிகளைச் சேர்ந்த, 35,294 மாணவர்கள், 128 மையங்களில் தேர்வு எழுதினர். தேர்வுப்பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர் உட்பட, 3,267 பேர் ஈடுபட்டனர்.
இதில், மாற்றுத்திறன், விபத்துக்குள்ளான மாணவர்களுக்கென, சொல்வதை தேர்வில் எழுத, 290 'ஸ்கிரைப்'கள் பணியமர்த்தப்பட்டனர். அதேபோல், 10ம் வகுப்பில், 518 பள்ளிகளைச் சேர்ந்த, 39,434 பேர், மாவட்டத்தில் உள்ள, 158 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுப்பணியில், 4,239 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில், ஸ்கிரைப்கள் மட்டும், 945 பேர்.
இதுவரை இப்படி பார்த்ததில்லை!
இதுவரை இல்லாத வகையில், இந்தாண்டு மட்டும் இரு வகுப்புகளிலும் சேர்த்து, 1,235 ஸ்கிரைப்கள் ஈடுபட்டுள்ளது, பள்ளிகள் மீது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
தேர்வு பறக்கும் படை பணியில் ஈடுபட்ட, பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு, 500 முதல், 700 பேர், இந்தாண்டு இரு வகுப்புகளுக்கும், 1,235 ஆசிரியர்களை 'ஸ்கிரைப்'களாக பார்க்க முடிந்தது. இதற்கு முந்தைய ஆண்டு வரை, இத்தனை எண்ணிக்கையில் இருந்ததில்லை.
நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு சமயத்தில், ஒரு பள்ளிக்குச் சென்றபோது, 27 மாணவர்கள் 'ஸ்கிரைப்' வைத்து தேர்வு எழுதினர். அதில், ஏழு மாணவர்கள் மட்டுமே உண்மையாகவே பாதிக்கப்பட்டிருந்தனர். மற்ற, 20 பேர் அவர்களே தேர்வெழுதும் உடல்நிலையில் இருந்தனர்.
இதை பார்க்கும்போது, குறிப்பாக தனியார் பள்ளிகள் சில, தேர்ச்சி விகிதத்தை காட்டும் நோக்கில் ஓரளவு பின்தங்கிய மாணவர்களுக்கு, முறைகேடான வழியில் மருத்துவ சான்றிதழ் பெற்று 'ஸ்கிரைப்' வாங்கிக்கொள்கின்றனர்.
போலி சான்றிதழ்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, சிறு வயது முதலே திறன் பாதிப்பு குறித்த மருத்துவ சான்று இருக்கும். ஆனால், கைகளில் அடிபட்டதாக, விபத்துக்குள்ளானதாக கூறும் மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று மருத்துவ சான்று பெற்றுவந்தால் மட்டுமே, ஸ்கிரைபுக்கு விண்ணப்பித்து பெற முடியும்.
உண்மையாக பாதிக்கப்பட்டிருந்தால்தான், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் சான்று தருவார்; எனவே, அங்கு முறைகேடு நடக்க வாய்ப்பு குறைவு. சிலர், தனியார் மருத்துவமனைகளில் போலி சான்றிதழ் பெற்றுள்ளனர்.
அதை அரசு மருத்துவமனை மருத்துவரிடம்,பரிந்துரை சான்றாக காண்பித்து, ஸ்கிரைப் பெறுவதற்கான சான்று பெற்றுவிடுகின்றனர். இப்படி முறைகேடான வழியில் மாணவர்களை தேர்ச்சி பெறவைக்க, தற்போது இது போன்ற வேலை நடக்கிறது.
'ஸ்கிரைப்'கள் மாணவர்கள் சொல்வதை மட்டுமே விடைத்தாளில் எழுத வேண்டும். ஆனால், கருணை பார்த்து மாணவர்கள் தேர்ச்சிபெற, 50 சதவீதம் மதிப்பெண்கள் வரை, ஆசிரியர்களே விடை எழுதிவிடுகின்றனர்.
நன்கு படிக்கும் மாணவனைவிட, 'ஸ்கிரைப்' வைத்து தேர்வெழுதிய மாணவன் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய காலம் எல்லாம் உண்டு. எனவே, தேர்வு எழுதும் ஆசிரியர்கள் மாணவர்கள் சொல்வதை மட்டுமே எழுத வேண்டும். அரசும் இதற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பட்டியல்///////
'ஸ்கிரைப்' முறையில்
தேர்வெழுதும் மாணவர்கள்
மதுரை:
2024
10ம் வகுப்பு- 235
பிளஸ் 2 - 97
2025
10ம் வகுப்பு - 265
பிளஸ் 2 - 110
-----------------
விருதுநகர்:
2024
10ம் வகுப்பு - 203
11ம் வகுப்பு - 120
பிளஸ் 2 - 107
2025
10ம் வகுப்பு - 228
11ம் வகுப்பு- 126
12ம் வகுப்பு - 120
-------------------
சிவகங்கை:
2024
10ம் வகுப்பு: 302
பிளஸ் 2 - 224
2025
10ம் வகுப்பு - 250
பிளஸ் 2 - 174
-----------------
ராமநாதபுரம்
2024
10ம் வகுப்பு - 213
பிளஸ் 2 - 49
2025
10ம் வகுப்பு -
பிளஸ் 2- 49
-----------------
தேனி:
ஆண்டு/ 10ம் வகுப்பு/ பிளஸ் 1/ பிளஸ் 2/2024/250/ 40/50
2025/ 130/60/65