கடல் புல் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம் வனத்துறை தகவல்
கடல் புல் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம் வனத்துறை தகவல்
ADDED : டிச 06, 2025 01:53 AM

சென்னை: 'மன்னார் வளைகுடா பகுதியில் நான்கு இடங்களில், 18 ஏக்கர் பரப்பளவில், கடல் புல் மறு சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் பகுதிகளில், இயல்பாக கடல் புல்வெளிகள் காணப்படும்; இது நீரடி தாவரமாக வளர்வதால், கடற்பசு மற்றும் மீன்கள் வளர உதவியாக அமைந்துள்ளது.
கடல் பகுதியில் ஏற்படும் மாசு மற்றும் வெப்பம் அதிகரிப்பால், கடல் புல்வெளிகள் அழிந்து வருகின்றன. தமிழக கடலோர பகுதியில், கடல் புல்வெளி பரப்பு வெகுவாக குறைந்து வருவது, ஆய்வுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, கடல் புல்வெளி மறுசீரமைப்பு பணிகளை வனத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதிகளில், 7 ஏக்கர் பரப்பளவில், கடல் புல்வெளி மறுசீரமைப்பு பணிகள், தமிழக கடலோர மேம்பாட்டு திட்டத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, மன்னார் வளைகுடா பகுதியில், கரியாச்சல்லி, 3; விலங்குசல்லி, தலையாரி, ஹரே தீவு ஆகிய இடங்களில் தலா, 5 ஏக்கர் என மொத்தம், 18 ஏக்கரில் கடல் புல்வெளி மறுசீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன.
இதன்படி மரச்சட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அதில் முதிர்ந்த கடல் புல் தாவரங்களை கட்டி, கடலில் பதிக்கப்படுகிறது.
இதில், கடல் புல் தாவரத்தின் வேர்ப்பகுதி நிலத்தில் நடப்படும். இது படிப்படியாக வளரும் போது, அப்பகுதியின் உயிர்ச்சூழல் மேம்படுத்தப்படும். உள்ளூர் மக்கள் பங்களிப்புடன், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

