விசாரணை என்ற பெயரில் பழங்குடி மக்களுக்கு மிரட்டல்: போலீஸ் மீது சீமான் குற்றச்சாட்டு
விசாரணை என்ற பெயரில் பழங்குடி மக்களுக்கு மிரட்டல்: போலீஸ் மீது சீமான் குற்றச்சாட்டு
ADDED : பிப் 20, 2025 01:12 PM

சென்னை: 'விசாரணை என்ற பெயரில் பழங்குடி மக்களை போலீசார் துன்புறுத்தலாமா?' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை; திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டன்பாளையத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வில் மூன்று மாதமாக துப்பு துலங்காத காரணத்தால், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச்சொல்லி பழவஞ்சிபாளைத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களை தமிழக போலீசார் மிரட்டுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா - கள்ளச்சாரய விற்பனை நிகழாத நாட்களே இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு முற்று முழுதாக சீரழிந்துள்ளது. குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் திறனற்றதாக திணறிவரும்தி.மு.க. அரசின் காவல்துறை, குற்றம் நடைபெற்றதற்கு பொய்க்காரணம் கற்பிக்கவும், அப்பாவிகளை குற்றவாளிகளாக கட்டமைக்கவும் முயல்வது வெட்கக்கேடானது.
தி.மு.க., அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை தடுக்க வேண்டுமென்றால், குற்றங்களை தடுக்கவும், உண்மைக்குற்றவாளிகளை விரைந்து தேடிப்பிடிக்க வேண்டுமே தவிர, குற்றத்தை மூடிமறைக்க முயல்வது காவல்துறையின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது. அப்பாவிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தி அவர்களை போலி துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா?
ஜெய்பீம் படம் பார்த்து கலங்கிய முதல்வர் ஸ்டாலின், தமது ஆட்சியில் தன் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை தொடர்ச்சியாக பழங்குடி மக்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தி பழிவாங்கும் கொடுமைகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பி பார்க்கும் தி.மு.க., அரசின் சாதனையா? இதுதான் திராவிடம் கட்டிக்காக்கும் சமூகநீதியா? சமத்துவமா? விளிம்பு நிலை பழங்குடி மக்கள் மீதான இத்தகைய அதிகார வன்முறைகளை திராவிட ஆட்சியாளர்கள் எப்போது கைவிடப் போகிறார்கள்? காவல்துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு புனையவும், அவதூறு பரப்புவும் காட்டும் வேகத்தில், அணுவளவு வேகத்தையாவது மக்களை காப்பதற்கும், குற்றங்களை தடுப்பதற்கும் தமிழக காவல்துறை காட்டினால் சட்டம் ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும்!
ஆகவே, திருப்பூர் மாவட்டம், சேமலைக் கவுண்டன்பாளைய மூவர் கொடூர கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டுமெனவும், விசாரணை என்ற பெயரில் பழவஞ்சிபாளைத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களை துன்புறுத்தும் கொடும்போக்கினை தி.மு.க., அரசு கைவிட வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

