திருச்சி டி.ஐ.ஜி., தொடர்ந்த அவதுாறு வழக்கு கெடுவை ஏற்று கோர்ட்டில் ஆஜரானார் சீமான்
திருச்சி டி.ஐ.ஜி., தொடர்ந்த அவதுாறு வழக்கு கெடுவை ஏற்று கோர்ட்டில் ஆஜரானார் சீமான்
ADDED : ஏப் 08, 2025 06:35 PM

திருச்சி:திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதுாறு வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும், 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த வருண்குமாரையும், அவரது குடும்பத்தாரையும், நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதுாறாக பதிவிட்டனர். மேலும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன் பேட்டியில், எஸ்.பி., வருண்குமார் குறித்து தரக்குறைவாகவும், அவதுாறாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, போலீசில் புகார் அளித்த வருண்குமார், தன்னை சீமான் அவதூறாக பேசியதற்காக, திருச்சி, நான்காவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சீமான் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் திருச்சி டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்ற வருண்குமார், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, சீமானை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஆஜராகவில்லை. சென்னையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொள்ள சென்றிருப்பதால், நீதிமன்றம் வர முடியவில்லை என, நீதிபதியிடம் சீமான் வழக்கறிஞர்கள் கூறி, ஆஜராக ஒரு நாள் அவகாசம் அளிக்குமாறு கோரினர்.
இதனால், வரும் 8ல் கண்டிப்பாக சீமான், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி விஜயா. இதை ஏற்றுக் கொண்ட சீமான், நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, வழக்கு தொடர்பாக வருண்குமார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரங்களின் நகல்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என சீமான் தரப்பு நீதிபதியிடம் கோரியது. இதையடுத்து, வருண்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆறு ஆதாரங்கள், சீமானிடம் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் 29க்கு தள்ளி வைக்கப்பட்டது.