அங்கன்வாடி ஊழியர்களை செவிலியராக நியமிக்கணும் சீமான் வலியுறுத்தல்
அங்கன்வாடி ஊழியர்களை செவிலியராக நியமிக்கணும் சீமான் வலியுறுத்தல்
ADDED : ஜன 09, 2026 02:05 AM

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணியர், பாலுாட்டும் பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டு பணிகளிலும் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
இப்பணிகளில், கிராமப்புற செவிலியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், அங்கன்வாடி ஊழியர்களை தேர்ந்தெடுத்து, கிராம சுகாதாரச் செவிலியருக்கான சிறப்பு பயிற்சியை அரசு அளித்தது.
இந்நிலையில், செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியராக பணி நியமனம் செய்வதை தி.மு.க., அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக மட்டுமே, கிராம சுகாதார செவிலியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம சுகாதார செவிலியராக பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இரண்டு ஆண்டுகள் கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெறச் சென்றதால், அங்கன்வாடி பணியில் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட எவ்வித சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
எனவே, சிறப்பு பயிற்சி பெற்ற 1,200 பேரை உடனடியாக கிராம சுகாதார செவிலியராக பணி நியமனம் செய்து, அரசாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

