'தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உறுதி செய்யும் பிரதமர் - உதயநிதி சந்திப்பு; ' சீமான் புது கண்டுபிடிப்பு
'தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உறுதி செய்யும் பிரதமர் - உதயநிதி சந்திப்பு; ' சீமான் புது கண்டுபிடிப்பு
ADDED : அக் 19, 2024 06:21 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
மழை வெள்ள நீர் சீரமைப்பு குறித்து, தி.மு.க., மீது அ.தி.மு.க., குறை கூறி வருகிறது. அதற்கான தகுதி அக்கட்சிக்கு இல்லை. இரு கட்சிகளும் இக்கட்டமைப்பில் தோல்வி அடைந்துள்ளதால், தொடர்ந்து ஓட்டளித்த மக்கள் தோற்று வருகின்றனர்.
மழை நீர் கால்வாய்க்கு ஒதுக்குகின்ற நிதி முழுதும் அரசியல்வாதிகள் வாய்க்கு சென்று விட்டன. தலைநகரின் நிலைமை இவ்வாறு என்றால், தமிழகம் முழுதும் நகராட்சிகளின் நிலை இன்னும் மோசம்.
தமிழக கவர்னரை மாற்றியே தீர வேண்டும் என்று அறைகூவல் விடுத்த தி.மு.க.,வினர் இப்போது அவரையே பாராட்டுகின்றனர். தமிழகத்தில் தற்போது பா.ஜ.,வும், தி.மு.க.,வும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டுத் துறை அமைச்சர் யாரும் பிரதமரை அடிக்கடி சந்திக்கவில்லை.
ஆனால், தமிழகத்தில் இருந்து அது நடக்கிறது. ஆனால், எதற்காக சந்திக்கிறோம் என இதுவரை கூறவில்லை.
தி.மு.க., - பா.ஜ., என இரு கட்சிகளுக்கும் இடையே வலுவான கூட்டணி உறுவாகி விட்டதை, இந்த சந்திப்பு சம்பவங்கள் காட்டுகின்றன.
பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இருந்தபோது தான், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்தது.
அந்த விழாவிற்கு வராத பா.ஜ., அமைச்சர், தி.மு.க.,வுடன் நேரடியான கூட்டணி இல்லை என்றாலும், கருணாநிதி நுாற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கலந்து கொள்ள வைக்கின்றனர். பா.ஜ.,விற்கு நாங்கள் 'ஏ - டீம்' என்றால், தி.மு.க., 'பி - டீம்' அவ்வளவுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

