களைகட்டும் கஞ்சா விற்பனை; ஒரே நாளில் பலரும் சிக்கினர்
களைகட்டும் கஞ்சா விற்பனை; ஒரே நாளில் பலரும் சிக்கினர்
ADDED : ஜன 09, 2026 06:07 AM

மதுரை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, கஞ்சா ஆயில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம், வயநாடு, மேப்பாடியை சேர்ந்தவர் மணிக்குயில், 28. இவர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மின்சார அலுவலகம் அருகே 6 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டாணா தோட்டம் பஸ் ஸ்டாப் அருகே கடமலைக்குண்டு போலீசார், திண்டுக்கல் மாவட்டம், விருவீடு தெப்பத்துபட்டி பாண்டி, 42, கம்பம் உத்தமபுரம் ரமேஷ், 45 ஆகியோரை, 12 கிலோ கஞ்சாவுடன் கைது செய்தனர். இதில், ரமேஷ் மீது, 8 கஞ்சா வழக்குகள் இருப்பதாக தேனி எஸ்.பி., புக்யா ஸ்நேகா ப்ரியா தெரிவித்தார்
துாத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் போலீசார், கோவில் பிள்ளைவிளை சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். டூ - வீலரில் காத்துக்கொண்டிருந்த அப்பகுதி ராஜேஷ், 39, பிரான்சிஸ், 22, ஆகியோரை சோதனையிட்ட போது, 5 லிட்டர் கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் என, எஸ்.பி., சிலம்பரசன் தெரிவித்தார். அவர்கள் கைது செய்யப்பட்டனர்
சேலம் மாநகர மதுவிலக்கு மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், எருமாபாளையத்தில் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்ட போது, 10 கிலோ கஞ்சாவுடன், வாழப்பாடி, சின்னமடுவை சேர்ந்த பரமசிவம், 57, பேளூர், சின்ன வேலம்பட்டி மாதையன், 40, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் கஞ்சா செடியை வளர்த்து, காய வைத்து, துாளாக்கி விற்பனை செய்துள்ளனர். இவர்களிடம், 79 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
ஈரோடு சங்கு நகரில், பாரதிபுரம் முருகேசன், 33, சோலாரை சேர்ந்த மதன், 31, ஆகியோரிடம், 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
இதேபோ ல, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, வெள்ளபாறையை சேர்ந்த பிரவீன், 22, என்பவரிடம், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

