UPDATED : செப் 20, 2024 11:59 AM
ADDED : செப் 19, 2024 11:22 PM

அரசே மதுபான தொழிலை நடத்தும் தமிழகத்தில், மது ஒழிப்பு மாநாடு நடத்த விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து திரும்பு முன், மற்றொரு கூட்டணி கட்சியான காங்கிரசும், தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க கிளம்பியிருக்கிறது. 'உள்ளாட்சி தேர்தலில், 20 சதவீதம் இடங்கள் தந்தால், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கலாம்; இல்லையேல், தனித்து போட்டியிடலாம்' என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம், செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், சூராஜ் ஹெக்டே பங்கேற்றனர்.
'ராஜிவ் கனவுப்படி, தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதே நம் நோக்கம். அதற்கான வாய்ப்பு எப்போது கிடைக்கிறதோ, அப்போது அந்த முயற்சியில் இறங்க வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
20
அதைத்தொடர்ந்து நடந்த விவாதத்தில், கூட்டணி ஆட்சி பற்றியும், உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்தும், மாநில, மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்தும் பலரும் பேசினர்.
அகில இந்திய காங்கிரஸ் செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான விஸ்வநாதன், உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தை மையமாக வைத்து பேசினார்.
''20 சதவீதம் இடங்களை, தி.மு.க., தலைமையிடம் கேட்க வேண்டும். காங்கிரஸ் போட்டியிடும் பதவிகள் குறித்து, குழு அமைத்து தி.மு.க.,வுடன் கறாராக பேரம் பேச வேண்டும். அதில், உடன்பாடு எட்டாவிட்டால் தனித்து போட்டியிடும் முடிவை தைரியமாக எடுக்க வேண்டும்,'' என்றார்.
அடுத்து பேசியவர்கள் அந்தக் கருத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். 'தி.மு.க., பெரிய கட்சி தான். ஆனால், அதன் வெற்றிக்கு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட கூடாது. உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை, தி.மு.க., தராவிட்டால் தனித்து போட்டியிட வேண்டும்' என்றனர்.
கூட்டணி ஆட்சி
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில், ''மாநில கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி வெறும் நான்கு எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு, தைரியமாக கூட்டணி ஆட்சி கோரிக்கையை எழுப்புகிறது.
''நம்மிடம் ஒன்பது எம்.பி.,க்களும், 18 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். எனவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை, நாம் திருமாவளவனை விடவும் உரத்த குரலில் கேட்க வேண்டும்,'' என்றார்.
தங்கபாலு பேசுகையில், ''ஆட்சியில் பங்கு என்பது நியாயமானகோரிக்கை, அது, நிறைவேற வேண்டும். நான் தலைவராக இருந்த போது, முதல்வராக இருந்த கருணாநிதியிடம் இந்த கோரிக்கையை ஓப்பனாக கேட்டேன். அவரும், 'காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை; ஆனால், உங்கள் கட்சியின் தேசிய தலைவர் சோனியா, அந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அப்படி நடந்தால் இது குறித்து பேசலாம்' என்றார். ஆனால், ஸ்டாலின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. அதனால், அவசரப்பட்டு பொது இடங்களில் இதை பேசி, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்,'' என்றார்.
மற்றொரு முன்னாள் தலைவர் இளங்கோவனும் அதே பாணியில், ''கூட்டணி ஆட்சி வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், அதற்கான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்,'' என்றார்.
சீர்திருத்தம்
மேலிட பொறுப்பாளர் சூரஜ் ஹெக்டே, ''அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கோஷ்டிகளாக செயல்படக் கூடாது,'' என்றார். மற்றொரு பொறுப்பாளர் அஜோய்குமார், ''இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் நிர்வாகிகள் நியமனத்தில் முக்கியத்துவம் தரும் சீர்திருத்த திட்டம், 10 நாட்களில் அறிவிக்கப்படும்,'' என்றார்.
- நமது நிருபர் -