செங்கோட்டையன் அண்ணன் மகன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்; இபிஎஸ் முன்னிலையில் இணைந்தார்
செங்கோட்டையன் அண்ணன் மகன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்; இபிஎஸ் முன்னிலையில் இணைந்தார்
ADDED : டிச 09, 2025 11:27 AM

சென்னை; முன்னாள் அமைச்சரும், அண்மையில் தவெகவில் இணைந்தருவருமான செங்கோட்டையனின் அண்ணன் மகன் மீண்டும் தம்மை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அண்மையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் உயர் மட்ட மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி அளிக்கப்பட்டது. நீலகிரி, ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந் நிலையில் செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து அதிமுகவில் இன்று இணைந்துள்ளார். சென்னையில் உள்ள இபிஎஸ் வீட்டில் அவர் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டு இருக்கிறார்.
செங்கோட்டையனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். அங்கு கே.கே. செல்வத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
ஆனால், அண்மையில் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இப்படியான அரசியல் சூழலில் தான், தம்மை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டு இருக்கிறார். அதிமுக எம்பியாகவும், பல்வேறு பொறுப்புகளில் இருந்து கொண்டும் அதிமுகவை வளர்க்க பெரும் பங்காற்றியவர் கே ஏ காளியப்பன்.
ஈரோடு மாவட்டத்தில் அதிமுக வளர கே ஏ காளியப்பன் பெரும் பங்காற்றியுள்ளார். இவரின் மகன் செல்வம் 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்து, சுற்றுச்சூழல் பிரிவில் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர்.

