கட்சி பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கம் : பழனிசாமி நடவடிக்கை
கட்சி பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கம் : பழனிசாமி நடவடிக்கை
UPDATED : செப் 06, 2025 11:46 PM
ADDED : செப் 06, 2025 11:38 PM

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, 10 நாட்கள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்கட்சியின் அமைப்பு செயலர், ஈரோடு புறநகர்
மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையனுக்கு ஆதரவளித்த ஏழு பேரின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க., அமைப்பு செயலர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.அவருக்கு பதிலாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலராக, அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., நியமிக்கப்படுகிறார். இவருக்கு அ.தி.மு.க.,வினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலர் தம்பி என்கிற சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலர் ஈஸ்வரமூர்த்தி என்கிற சென்னை மணி, கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலர் குறிஞ்சிநாதன்...
அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலர் தேவராஜ், அத்தாணி பேரூராட்சி செயலர் ரமேஷ், துணை செயலர் வேலு என்கிற மருதமுத்து, ஈரோடு மண்டல ஐ.டி., அணி துணை செயலர் மோகன்குமார் ஆகியோரும், அவரவர் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்
படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரவணைப்பு
கோபிசெட்டிப்பாளையத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 'மறப்போம்; மன்னிப்போம் என்ற அடிப்படையில், வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே, தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். 'அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்ற வர்களை இணைக்க, பொதுச்செயலர் பழனிசாமி, 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில், என் போன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் சேர்ந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்' என, எச்சரிக்கை விடுத்திருந்தார்.எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து, அ.தி.மு.க.,வில் பயணிக்கும் மூத்த தலைவரான செங்கோட்டையனின் கலகக்குரல், அக்கட்சியில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலோசனை
இந்தச் சூழலில், தென் மாவட்டங்களில் பிரசார பயணம் மேற்கொண்டு வரும் பழனிசாமி, திண்டுக்கலில் உள்ள தனியார் ஹோட்டலில், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், சீனிவாசன், விஸ்வநாதன், காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பது குறித்து, செங்கோட்டையன் தெரிவித்த கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், கட்சி பொறுப்புகள் அனைத்தில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டு
உள்ளார்.
'அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு பணியை தொடர்வேன்'
''என்னிடம் விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு பணியை தொடர்வேன்,'' என, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டுமானால், கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும் என தொண்டர்களும், பொது மக்களும் விரும்புகின்றனர். தொண்டர்களின் உணர்வுகளையும், பொது மக்களின் எதிர்பார்ப்புகளையும் தான் நான் வெளிப்படுத்தினேன்.
'காலில் விழுந்து கூட கேட்கிறோம்; கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று காஞ்சிபுரத்தில் பேசியிருக்கின்றனர். அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் தான், கட்சியின் நலன் கருதி நான் பேசினேன்.
அதற்காக, என்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவித்துள்ளனர்.
ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்; அதுதான் ஜனநாயகம். அ.தி.மு.க.,வில் ஜனநாயக முறைப்படி, சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என மேடையில் பேசுகிறார் பழனிசாமி. ஆனால், என்னிடம் விளக்கம் கூட கேட்காமல், கட்சி பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். இதை நான் எதிர்பார்க்கவில்லை.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்டோர், என் கருத்து நியாயமானது என தெரிவித்துள்ளனர். கட்சியின் நலன் கருதியே நான் பேசினேன்.
கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை தொடர்வேன். என்னை நீக்கியதால் கட்சிக்கு பாதிப்பா என்பதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற தொண்டர்களின் உணர்வுகளை பழனிசாமி புறக்கணிக்கிறாரா என்பதற்கு, அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.
அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசினர்; என்ன பேசினர் என்பது குறித்து இப்போது சொல்வதற்கில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து போக போக தெரியும்.
நான் உள்ளிட்ட ஆறு முக்கிய நிர்வாகிகள் பழனிசாமியை சந்தித்தது பொய் என்கின்றனர். ஆனால், இதை எட்டு மாதங்களுக்கு முன், நான் வெளிப்படையாக சொல்லிஇருக்கிறேன். அப்போது எதுவும் சொல்லாதவர்கள், இப்போது அதை பொய் என மறுப்பது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.