செனனை சோதனையில் சிக்கியது 1,400 கிலோ தங்கம்: ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
செனனை சோதனையில் சிக்கியது 1,400 கிலோ தங்கம்: ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
UPDATED : ஏப் 14, 2024 11:10 AM
ADDED : ஏப் 13, 2024 11:45 PM

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர், பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர், சென்னையில் நேற்று 1,400 கிலோ தங்கக் கட்டிகள் எடுத்து வந்த இரண்டு வாகனங்களை மடக்கிப் பிடித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால், 850 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
ஓட்டு வேட்டைக்கு ஏற்ப, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்க அரசியல் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதை முறியடிக்க, 700க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படைகள், மாநிலம் முழுதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
ரூ. 324.38 கோடி
ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், அவர்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருக்கும், கோடிக்கணக்கான ரூபாய்களையும், வருமான வரித்துறை அதிகாரிகளும், 'ரெய்டு' வாயிலாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம், கூடலுார் தாலுகா, ஸ்ரீமதுரை முன்னாள் பஞ்., தலைவரும், காங்., பிரமுகருமான ஏ.ஜெ.தாமஸ் வீட்டில், 3 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் எட்டரை பஞ்., தலைவர் திவ்யா வீட்டில், 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் நேற்று காலை வரை, 155.88 கோடி ரூபாய் ரொக்கம்; 5.47 கோடி ரூபாய் மதுபானம்; 1.02 கோடி ரூபாய் போதைப் பொருட்கள்; 127.40 கோடி ரூபாய் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்; 34.61 கோடி ரூபாய் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 324.38 கோடி ரூபாய்.
இந்நிலையில், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் நெடுஞ்சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பகல் 3:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த, 'பிரிங்க்ஸ்' என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மினி கன்டெய்னர் லாரி மற்றும் மினி வேனை மடக்கி சோதனை செய்தனர்.
ஆவணங்கள் இல்லை
மினி லாரியில் 1,000 கிலோ தங்கமும், மினி வேனில் 400 கிலோ தங்கமும் கட்டிகளாக இருப்பது தெரிய வந்தது.
வாகனத்தில் வந்த ஊழியர்களிடம் விசாரித்த போது, சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் அருகே மண்ணுாரில் உள்ள தனியார் குடோனுக்கு, தங்க கட்டிகளை எடுத்து செல்வது தெரியவந்தது.
இவர்களிடம், 400 கிலோ தங்கத்திற்கான ஆவணங்கள் மட்டும் இருந்தன; 1,000 கிலோ தங்கக் கட்டிகளுக்கான ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து, தங்கக் கட்டிகளுடன் இரண்டு வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கடத்தி வரப்பட்டதா?
தங்கக் கட்டிகள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
சுங்கத்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகளை ஏமாற்றி, ஆவணம் இல்லாத தங்கக் கட்டிகள் எப்படி வெளியே எடுத்து வரப்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதற்காக இவ்வளவு தங்கம் குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்தும், பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நமது நிருபர் -

