ADDED : ஜன 08, 2024 05:48 AM
சென்னை: போக்குவரத்து துறையில் பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்று ஏமாற்றியதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய, அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதி கோரி, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை, நீதிமன்ற பணி நேரத்தில் ஆய்வு செய்ய, அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், ஒரு லட்சத்துக்கும் அதிக பக்கங்கள் கொண்ட ஆவணங்களை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.