ADDED : மார் 12, 2024 01:20 AM

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 25வது முறையாக நீட்டித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி விடுமுறை என்பதால், 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையை, வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கும்படி செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி டி.வி.ஆனந்த், வரும், 13ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 25வது முறையாக வரும், 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

