UPDATED : ஏப் 10, 2025 01:06 AM
ADDED : ஏப் 09, 2025 11:45 PM

சென்னை :சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.
கடந்த 2011 - 2015 அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். பணி நியமனங்களுக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், வழக்குப்பதிவு செய்தது.
குற்றப்பத்திரிகை
இந்த வழக்கு விசாரணை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது, கூடுதல் குற்றப்பத்திரிகையை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர். இதில், 2,100க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, 2023 ஜூன் 14ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக, 2023 ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு, பலமுறை, 'சம்மன்' அனுப்பியும், அவர் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக்குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் சண்முகம், கார்த்திகேயன், கணேசன், வெற்றிச்செல்வன், அருண் ரவீந்திர டேனியல், ஆல்பிரட் தினகரன், ஜெயராஜ்குமார், பழனி, லோகநாதன், பிரபு, அனுராதா ரமேஷ் ஆகிய 12 பேருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை, கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது.
சம்மன்
இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், ஏப்., 9ல் அசோக்குமார் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக, 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்தி கேயன் முன், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட, 12 பேரும் நேரில் ஆஜராகினர்.
அதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் ரஜினீஷ் பதியில் ஆஜராகி, ''கூடுதல் குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து, 5,000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு, அவை மின்னணு வடிவில் வழங்கப்படும்,'' என்றார்.
இதற்கு, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மின்னணு வடிவில் மட்டும் இல்லாமல், காகித வடிவிலும் வழங்க வேண்டும். அப்போது தான் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்' என்றனர்.
'புதிய சட்டத்தின்படி மின்னணு முறையிலும் ஆவணங்கள் வழங்கலாம்' எனக் கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அன்று, குற்றப்பத்திரிகை நகல்களை வழங்க தயாராக இருக்குமாறு, அமலாக்கத் துறை தரப்புக்கு அறிவுறுத்தினார்.