அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டு செந்தில் பாலாஜி தம்பி வழக்கு
அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டு செந்தில் பாலாஜி தம்பி வழக்கு
ADDED : ஜூலை 15, 2025 11:54 PM
சென்னை:மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு, அமலாக்கத் துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளனர்.
மேல்முறையீடு
இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து, அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அசோக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “15 நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'நீங்களே நினைத்தாலும் நீண்ட நாட்கள் இருக்க முடியாது; டிரம்ப் உங்களை வெளியேற்றி விடுவார்' என, நகைச்சுவையாக குறிப்பிட்டனர். இதைதொடர்ந்து, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜ்னீஷ் பத்தியால், “மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும்,” என கேட்டார்.
பதிலளிக்க உத்தரவு
இதையடுத்து, 'ஒருவேளை அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால், பாஸ்போர்ட்டை அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகத்தில் ஒப்படைக்க நேரிடும். எனவே, பயண திட்டம் உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என அசோக்குமார் தரப்புக்கும், மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத் துறைக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை, வரும் 22க்கு தள்ளிவைத்தனர்.