குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில்பாலாஜி இன்று ஆஜர்
குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில்பாலாஜி இன்று ஆஜர்
UPDATED : ஆக 08, 2024 03:42 AM
ADDED : ஆக 07, 2024 08:20 PM

சென்னை:குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, இன்று ஆஜர்படுத்த, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, குற்றச்சாட்டு பதிவுக்காக, நேற்று செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவை, நேற்று நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார். செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து, குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைக்க கோரிய மனு மீதான உத்தரவை, இன்று பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 'நேரில் ஆஜர்படுத்தவில்லை என்றாலும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்த வேண்டும்; அப்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும். செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்த அறிக்கையை, சிறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்' என கூறிய நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, இன்று வரை நீட்டித்தார்.
இதற்கிடையில், இவ்வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு, வரும் 14ல் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.