ADDED : செப் 18, 2024 10:00 PM
சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணைக்கு, அரசு ஒப்புதல் வழங்கி விட்டதாக, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குற்றச்சாட்டு பதிவுக்காக, அக்., 1ல் செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், 2011 - -15ல் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். துறையில் பணி நியமனங்களுக்காக, பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்பட 40க்கும் மேற்பட்டோருக்கு எதிராக, 2015ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மொத்தம் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் ஒரு வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மற்ற வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக விசாரணை நடத்த உத்தரவிட்டதை ரத்து செய்து, அனைத்து வழக்குகளிலும் விசாரணையை முடித்து, இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, இந்த வழக்கில், கடந்தாண்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை, நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடந்து வருகிறது.
இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜிக்கு எதிராக விசாரணை நடத்த, அரசின் அனுமதி மற்றும் ஒப்புதல் கிடைத்துள்ளது எனக் கூறி, அதற்கான நகலை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணையை அக்., 1க்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் செந்தில் பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராக உத்தரவிட்டார்.
***