ADDED : ஆக 09, 2025 09:22 PM
ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து, நேற்று காலை, 7:00 மணிக்கு, 220 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் இந்திய - இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். காலை, 10:30 மணிக்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை விரட்டினர்.
கடலில் வீசிய வலையை படகில் அவசரமாக இழுத்த நிலையில், ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தை சேர்ந்த இருதய டிக்சன் என்பவரது படகை இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்தனர்.
படகில் இருந்த மீனவர்கள் டல்லஸ், 56, ஸ்லைடன், 26, அருள் ராபர்ட், 53, லொய்லன், 45, ஆரோக்கிய சான்ரின், 20, பாஸ்கர், 45, சேசுராஜா, 32, ஆகியோரை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களை, மன்னார் மீன்துறை அதிகாரியிடம் இன்று ஒப்படைத்த பின், வவுனியா சிறையில் அடைக்க உள்ளனர்.

