தமிழகத்தில் ‛'ஸ்மார்ட் கார்டு'க்கு தட்டுப்பாடு; லைசென்ஸ், ஆர்.சி., பெறுவதில் சிக்கல்
தமிழகத்தில் ‛'ஸ்மார்ட் கார்டு'க்கு தட்டுப்பாடு; லைசென்ஸ், ஆர்.சி., பெறுவதில் சிக்கல்
ADDED : ஏப் 08, 2025 02:22 AM

சிவகங்கை: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லைசென்ஸ், ஆர்.சி.,க்கான ஸ்மார்ட் கார்டு தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
தமிழக அளவில் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் மோட்டார் வாகன ஆய்வாளர் முன்னிலையில் வாகனங்களை ஓட்டி காண்பித்து, லைசென்ஸ் பெற வேண்டும். அதே போன்று வாகனங்களை புதுப்பித்து, அந்த வாகனத்தை காண்பித்த பின் ஆர்.சி., ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். லைசென்ஸ், ஆர்.சி., கோரி விண்ணப்பித்து உரிய விசாரணைக்கு பின் போட்டோ எடுக்கின்றனர். ஆர்.டி.ஓ., பரிந்துரைக்கு பின் 'ஸ்மார்ட் கார்டு' மற்றும் ஆர்.சி., புத்தகம் தயாரித்து அந்தந்த வாகன உரிமையாளர் விலாசத்திற்கே பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
ஆர்.சி., ஸ்மார்ட் கார்டு கட்டணம், தபால் செலவு என அனைத்தும் விண்ணப்பதாரரிடம் இருந்து பெறப்பட்டுவிடுகிறது.
தமிழக அளவில் மாதத்திற்கு1.08 லட்சம் லைசென்ஸ், ஆர்.சி., 'ஸ்மார்ட் கார்டு' மூலம் வழங்கப்படுகிறது. ஆனால், கார்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 10 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கும் நிலை நிலவுகிறது.
வட்டார போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழக அளவில் 'ஸ்மார்ட் கார்டு' சப்ளை இல்லாததே இதற்கு காரணம். மேலும் என்.ஐ.சி., சர்வரிலும் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட் கார்டில் செலுத்திய விபரங்களை ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை. இது போன்ற காரணத்தால் தான் லைசென்ஸ், ஆர்.சி., 'ஸ்மார்ட் கார்டு' வழங்கமுடியவில்லை, என்றார்.

