தேச விரோத பேச்சை சுட்டிக்காட்டினால் வழக்கு போடுவதா: காடேஸ்வரா கண்டனம்
தேச விரோத பேச்சை சுட்டிக்காட்டினால் வழக்கு போடுவதா: காடேஸ்வரா கண்டனம்
UPDATED : ஆக 28, 2025 10:34 AM
ADDED : ஆக 28, 2025 01:22 AM

சென்னை: 'தேச விரோத பேச்சை சுட்டிக்காட்டிய, 'ஸ்ரீ டிவி' இயக்குநர் பால கவுதமன் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உஸ்தாத் பீர் முகமது சதக்கி, தமிழகத்தின் பொது அமைதியை குலைக்கும் வகையில், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். இது போன்ற பேச்சுகள் தான், கடந்த காலங்களில் மதக் கலவரங்கள் ஏற்பட வழி வகுத்தன. இந்தியாவிலேயே இருந்து கொண்டு, 'இந்தியா மீது படையெடுப்போம்' என பேசிய உஸ்தாத் மீது, தமிழக காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேநேரம், அவரது தேச விரோத பேச்சின் அபாயத்தை எடுத்துக்கூறி, தமிழ் மக்களை எச்சரித்த வேத விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்தின் தலைவரும், ஸ்ரீ டிவி இயக்குநருமான பால கவுதமன் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது யாரும் புகார் கொடுக்காத நிலையில், சமூக வலைதள கண்காணிப்பு குழு சப்- - இன்ஸ்பெக்டர் வாயிலாக புகார் அளித்து, அதை வழக்காக பதிவு செய்துள்ளனர். இது காவல் துறையின் உள்நோக்கத்தை, ஒருதலைபட்சமான போக்கை காட்டுகிறது.
முஸ்லிம்களை இந்தியாவின் மீது போர் தொடுக்க சொல்லும் உஸ்தாத்தின் பேச்சு, சமூக அமைதியை பாதிக்கவில்லையா; அது, தேசத்திற்கு அச்சுறுத்தல் இல்லையா என்பதற்கு காவல் துறை பதில் அளிக்க வேண்டும். சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, பயங்கரவாதம் பேசுவோரை ஆதரிப்பதும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்.
தமிழக அரசும் பயங்கரவாதத்தை துாண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. யாராவது அதை சுட்டிக்காட்டி பேசினால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொல்லை கொடுப்பது, சர்வாதிகார ஆட்சிக்கு சமமானது. வெறுப்பு பேச்சு பேசியோர் மீது, தாமாகவே முன்வந்து, காவல் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை, தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் நினைவுப்படுத்துகிறோம். மத வெறுப்புணர்வுடன் பேசிய உஸ்தாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். பால கவுதமன் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

